இந்தியன் 2 படத்தை வெளியிட தடை கோரி வழக்கு: நாளைக்கு ஒத்திவைப்பு!

இந்தியன் 2 படத்தை வெளியிட தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் படக்குழு பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘இந்தியன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா புரொடக்சன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். ‘இந்தியன் 2’ திரைப்படம் நாளை மறுநாள் (ஜூலை 12) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் ‘இந்தியன் 2’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று மதுரை எச்.எம்.எஸ்.காலனியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மதுரை மாவட்ட 4-வது முன்சீப் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர், “மஞ்சா வர்மக்கலை தற்காப்பு பயிற்சி பள்ளி ஆராய்ச்சி கூடம் என்ற பெயரில் கடந்த 55 ஆண்டுகளாக வர்மக்கலை தற்காப்பு பயிற்சிகளை அளிக்கிறோம். கடந்த 1996-ம் ஆண்டு வெளியான இந்தியன் சினிமாவுக்காக நடிகர் கமல்ஹாசனுக்கு படப்பிடிப்பு தளத்தில் வர்மக்கலைகளை கற்றுக் கொடுத்தேன். இந்த வர்மக்கலை அனைத்தும் ரகசியமானவை. இதனால் அந்த படத்தின் டைட்டில் கார்டில் எனது பெயர் சேர்க்கப்பட்டது.

இந்த நிலையில் இந்தியன் படத்தின் 2-ம் பாகம் விரைவில் வெளியாக உள்ளது என செய்தி வெளியானது. ‘இந்தியன் 2’ படத்தில் நான் ஏற்கனவே சொல்லி கொடுத்த முத்திரையை பயன்படுத்தி உள்ளனர். இதற்காக என்னிடம் தடையில்லா சான்று பெறவில்லை. இந்த படத்தில் எனது பெயரை டைட்டில் கார்டில் சேர்க்க வேண்டும் என ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியும் பதில் இல்லை. எனது கோரிக்கையை நிறைவேற்றும் வரை ‘இந்தியன் 2’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கில் ஏற்கனவே படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி செல்வமகேஸ்வரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குனர் ஷங்கர் சார்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கு குறித்து பதில் அளிக்க 2 வாரம் அவகாசம் வேண்டும் என கோரினார். அதற்கு நீதிபதி, ‘இந்தியன் 2’ படம் வருகிற 12-ந்தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதால், விரைவாக பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, விசாரணையை 11-ந்தேதிக்கு (நாளை) ஒத்திவைத்தார்.