ஷோபா கரந்தலஜேவுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகத்தை தொடர்புபடுத்தி பேசிய வழக்கில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜேவுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழகத்தை சேர்ந்த நபர் தான் காரணம் என மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஷோபா கரந்தலஜே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஷோபா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர். ஹரிபிரசாத் ஆஜராகி, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

காவல்துறை சார்பில் வழக்கறிஞர் கே.எம்.டி. முகிலன் ஆஜராகி, வழக்கின் விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அவ்வாறு ஒத்திவைப்பதாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டுமென மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.

இடைக்கால நிவாரணம் வழங்க மறுப்பு தெரிவித்த நீதிபதி குண்டு வைத்தவர்கள் தமிழ்நாட்டில் பயிற்சி எடுத்தது முன்னதாகவே தனக்கு தெரிந்திருக்கும் பட்சத்தில் பொறுப்பான குடிமகன் என்ற முறையில் முன்கூட்டியே காவல்துறைக்கு தகவல் அளித்திருக்க வேண்டும் என கூறினார். இதனையடுத்து, வழக்கின் விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.