செந்தில் பாலாஜி வழக்கில் ஜூலை 12 ஆம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி அறிவிப்பு!

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் தீர்ப்பினை தள்ளி வைக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது நாளை மறு நாள் (ஜூலை 12 ஆம் தேதி) உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தள்ளிவைக்க கோரி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்டு, சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் தீர்ப்பினை தள்ளி வைக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் வாதங்களை துவங்காததால், விசாரணையை தள்ளிவைக்கக் கோரிய மனு மீது ஜூலை 12 ஆம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி அறிவித்தார்.

இதுஒருபுறம் இருக்க, செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூலை 12 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.