சாராயங்கள் புழங்குவதை தடுப்பது தமிழக அரசின் கடமை: எடப்பாடி பழனிசாமி!

“புதுச்சேரியிலிருந்து கொண்டுவரப்பட்ட சாராயம் அருந்திய 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி கவலையளிக்கிறது. கள்ளச் சாராயப் புழக்கத்தை கட்டுப்படுத்தத் திராணியற்ற திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது:-

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே புதுச்சேரியிலிருந்து கொண்டுவரப்பட்ட சாராயம் அருந்திய 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி கவலையளிக்கிறது. நான் ஏற்கெனவே சொன்னது போல, அதிகாரிகளை மட்டும் மாற்றிவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று திமுக முதல்வர் செயல்படுவது எந்த பலனும் அளிக்காது. அடிப்படை நிர்வாகச் சீரமைப்பில் கவனம் செலுத்தாமல் கள்ளச் சாராயப் புழக்கத்தை கட்டுப்படுத்தத் திராணியற்ற திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், அண்டை மாநில சாராயங்கள் புழங்குவதை தடுப்பது அரசின் கடமை என்பதை உணர்ந்து, எல்லைகளில் மதுவிலக்கு சோதனைகளை தீவிரப்படுத்தவும் திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.