சாட்டை துரைமுருகன் பேசியதில் என்ன தவறு?: சீமான்!

சாட்டை துரைமுருகன் பேசியதில் என்ன தவறு? சாட்டை துரைமுருகன் பேசியதையே நானும் பேசுகிறேன்.. என்னை கைது செய்வீர்களா? என ஆவேசமாக கேள்வி எழுப்பி இருக்கிறார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது. இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அபிநயா போட்டியிட்டுள்ளார். அவரை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சாட்டை துரைமுருகனும் பங்கேற்றார். சாட்டை துரைமுருகன் பேசும் போது முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தினார். இதனால் சொந்த ஊருக்கு சென்ற சாட்டை துரைமுருகனை குற்றாலம் அருகே போலீசார் கைது செய்தனர். இந்த கைதுக்கு கண்டனம் தெரிவித்து சென்னை செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:-

சாட்டை துரைமுருகன் குற்றாலம் போகவில்லை. அவரது ஊரில் அடுத்த வாரம் திருவிழா. அதற்காக போனவர்தான். கள்ளச்சாராயம் விற்றவன், 31 நாட்களில் 131 கொலை நிகழ்ந்துள்ளது; தம்பி ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பின்னரே இது தெரிய வருது. மரக்காணம், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து எவ்வளவு பேர் மரணம்? இதற்கு பிறகும் விக்கிரவாண்டியில் நேற்று கள்ளச்சாராயம் குடித்து எத்தனை பேர் பாதிப்பு? புதுச்சேரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு எப்படி சாராயம் வருது? எங்க வண்டிகளை எத்தனை இடத்தில் சோதனை போடுகிறீர்கள்? அதை மீறி எப்படி வரும்?

கொலைகாரர்கள், சாராய ஆலை அதிபர்கள் கையில் ஆட்சியை கொடுத்தால் கொலையை எப்படி தடுக்க முடியும்? கள்ளச்சாராயத்தை எப்படி தடுக்க முடியும்? இவர்கள் மீது எல்லாம் பாயாத வழக்கு, சட்டம், பேசியதற்காக துரைமுருகனை கைது செய்வதா? எதற்காக சாட்டை துரைமுருகனை கைது செய்தீர்கள்? என்னைவிட பேசிவிட்டாரா துரைமுருகன்? அதிகாரத்தில் இருக்கிற பவர்புல் கிங்தானே நீங்க.. என்னையை கைது செய்யுங்க பார்க்கலாம்? என்னை சுற்றி இருக்கிறவர்களை கைது செய்து எனக்கு நெருக்கடி கொடுப்பதுதானே..

சாட்டை துரைமுருகன் முன்னாள் முதல்வர் கருணாநிதியை எங்கே அவதூறு செய்து பேசினார்? அவர் பாடியது ஏற்கனவே இருந்த பாட்டுதானே? எழுதினவன், பாடினவனை விட்டுவிட்டு எடுத்து பாடியவரை ஏன் கைது செய்றீங்க? நானும் அதே பாட்டை இதோ பாடுகிறேன்.. இப்ப நான் பாடிட்டேன் என்னை கைது செய் பார்க்கலாம்.. நீ புள்ள பூச்சிய பிடிச்சு விளையாடுவ.. தேள், பாம்பு, நட்டுவாகளியை பிடிச்சு விளையாடேன்.. முன்னாள் முதல்வர் கருணாநிதியை பேசவே கூடாதா? திமுகவினர் பேசாத பேச்சா பேசுகிறோம்? முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பற்றி இப்போதைய முதல்வர் ஸ்டாலின் பேசியதை எல்லாமே எடுத்து அனுப்பட்டா? நீங்க பேசுவது கருத்துரிமை; நாங்க பேசினால் அவமதிப்பா? முடிந்தால் என்னை கைது செய்யுங்களேன். இவ்வாறு சீமான் கூறினார்.