தமிழக மீனவர்களை, படகுகளை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: முத்தரசன்!

இலங்கை கடற்படையினரின் தாக்குதல் தொடர்ந்து நடைபெறுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முத்தரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டை பட்டினம் மற்றும் ஜெகதாபட்டினம் பகுதிகளிலிருந்து, கடந்த 9-ஆம் தேதி மீனவர்கள் 176 விசைப் படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். நேற்று அதிகாலை வரை மீன் பிடித்து விட்டு, கரை திரும்பியுள்ளனர். நெடுந்தீவு அருகே வந்து கொண்டிருந்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி, கடல் எல்லையை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மூன்று விசைப்படகுகள் உட்பட 13 மீனவர்களை கைது செய்து காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் கடந்த 26 நாளில் தமிழக மீனவர்கள் 26 பேர் கைது செய்துள்ளதுடன், அவர்களிடம் இருந்து 13 விசைப் படகுகளும் வலைகளும், பிடிக்கப்பட்ட மீன்களும், இதர உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரின் தாக்குதல் தொடர்ந்து நடைபெறுவதை ஒன்றிய அரசு தடுக்க வேண்டும்.

மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களது மீன்பிடி உரிமையை பாதுகாப்பதில் மத்திய அரசு அளித்த உறுதி மொழிகளை நிறைவேற்றாமல் தமிழக மீனவர்களை வஞ்சித்து வருவதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டிப்பதுடன், இதுவரை கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து, அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகள் உள்ளிட்ட பொருட்களையும் மீட்டு கொண்டு வர மத்திய அரசும், வெளியுறவுத் துறை அமைச்சகமும் உறுதியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.