காங்கிரஸ் செய்த தவறுகளை நாமும் செய்யக்கூடாது: நிதின் கட்காரி!

காங்கிரஸ் செய்த தவறுகளுக்காகவே மக்கள் பா.ஜனதா கட்சியை தேர்ந்தெடுத்துள்ளனர். நாமும் அதே தவறுகளை செய்யக்கூடாது என்று நிதின் கட்காரி கூறினார்.

கோவாவின் பனாஜி அருகே உள்ள தாலிகோவாவில் பா.ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி, கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த், பா.ஜ.க. மாநில தலைவர் சதானந்த் தனவாடே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி நிதின் கட்காரி பேசியதாவது:-

பா.ஜனதா கட்சி வித்தியாசமான கட்சியாக இருந்து வருகிறது. அதனால் தான் வாக்காளர்களின் நம்பிக்கையை மீண்டும் மீண்டும் பெற்றுள்ளது. காங்கிரஸ் செய்த தவறுகளுக்காகவே மக்கள் பா.ஜனதா கட்சியை தேர்ந்தெடுத்துள்ளனர். நாமும் அதே தவறுகளை செய்தால், காங்கிரஸ் வெளியேறுவதிலும், நாம் ஆட்சிக்கு வருவதிலும் எந்த பயனும் இருக்காது. மற்ற கட்சிகளில் இருந்து நாம் எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறோம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

வரும் நாட்களில் அரசியல் என்பது சமூகம் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கான கருவி என்பதை கட்சி தொண்டர்கள் அறிந்து கொள்ள வேண்டும். நாம் ஊழலற்ற நாட்டை உருவாக்க வேண்டும். அதற்காக நாம் ஒரு திட்டத்தை வைத்திருக்க வேண்டும். சாதி அடிப்படையிலான அரசியலை பின்பற்ற வேண்டாம் என்று நான் முடிவு செய்துள்ளேன். நான் சாதி அடிப்படையிலான அரசியலில் ஈடுபட மாட்டேன் என்பதை மக்களுக்கு தெளிவுப்படுத்தி உள்ளேன். சாதியை பற்றி யார் பேசினாலும் அவர்களுக்கு வலுவான உதை கிடைக்கும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.