திமுக அரசு மக்களின் முதுகில் குத்தியுள்ளது: அன்புமணி

வீடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக தமிழக அரசை அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். திமுக அரசு மக்களின் முதுகில் குத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை 4.83 சதவிகிதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சார வாரியத்திற்கு ஆண்டுக்கு ரூ.6000 கோடிக்கும் கூடுதலான வருவாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த கட்டண உயர்வு ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக மக்கள் விலைவாசி உயர்வு, வாழ்வாதார பாதிப்பு ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று விமர்சித்துள்ளார்.

மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முடிவு தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையத்தால் எடுக்கப்பட்டது என்று கூறி தமிழக அரசு தப்பித்து விட முடியாது என்ற அன்புமணி, “ ஒழுங்குமுறை ஆணையம் என்பது பொம்மை அமைப்பு. தமிழக அரசின் கண்ணசைவுக்கு ஏற்ற வகையில் அது செயல்படும். ஜூலை 1 முதல் செயல்படுத்தப்படும் மின்கட்டண உயர்வை விக்கிரவாண்டி தேர்தல் முடிவடைந்த பிறகு ஜூலை 15ம் நாள் அறிவித்திருப்பதிலிருந்தே இதை உணரலாம்” என்று சுட்டிக்காட்டினார்.

தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணம் கடந்த 2022ம் ஆண்டு சுமார் ரூ.31,500 கோடிக்கு உயர்த்தப்பட்டன என்றும், ஆனாலும், மின்சார வாரியத்தின் இழப்பு குறைவதற்கு பதிலாக அதிகரித்திருக்கிறது எனவும் சுட்டிய அவர், மின்சார வாரியத்தில் நிலவும் ஊழல், முறைகேடுகள் ஆகியவற்றை களையாமல் மின்சாரக் கட்டணத்தை மட்டும் உயர்த்துவதால் எந்தப் பயனும் இல்லை. மாறாக, மின்சார வாரியத்தில் ஊழல் அதிகரிக்கவே வகை செய்யும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், “விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவடைந்த பிறகு இப்போது மின் கட்டணத்தை உயர்த்தியிருப்பதன் மூலம் மக்களை முட்டாள்களாக்கி அவர்களின் முதுகில் குத்தியுள்ளது. விக்கிரவாண்டி வெற்றிக்காக மக்களுக்கு திமுக அளித்துள்ள பரிசு தான் மின் கட்டண உயர்வு. முன்பு உயர்த்தப்பட்ட மின் கட்டணங்களால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொழில் நிறுவனங்கள் கடும் இழப்பை சந்தித்து வருகின்றன. இந்த சூழலில் புதிய கட்டண உயர்வு ஏழைகளையும், தொழில் நிறுவனங்களையும் கடுமையாக பாதிக்கும். ஆகவே, மின் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் பாமக மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தும்” என்று அன்புமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.