சூடான் கடலில் 15 ஆயிரம் ஆடுகள் பலி!

சூடான் கடல் பகுதியில் 15 ஆயிரம் ஆடுகள் பிணமாக மிதந்தபடி வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சூடானில் இருந்து அவ்வப்போது ஆடுகள் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். உணவு தேவைக்காகவும், தோல் தேவைக்காகவும் ஆடுகள் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். சூடான் வறுமையில் உள்ள நிலையில், அவர்களின் வருமானத்தில் இந்த ஆடுகள் ஏற்றுமதி முக்கியமான பங்கு வகித்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று முதல் நாள் சூடானில் சிவப்பு கடல் துறைமுகத்தில் இருந்து ஆடுகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. சவுதி நோக்கி இந்த ஆடுகள் கப்பலில் அனுப்பப்பட்டன. மொத்தம் 15800 ஆடுகள் ஒரே ராட்சச கப்பலில் கூண்டுகளில் அடைக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டது. கப்பல் கடலுக்கு சென்று சில மணி நேரங்களில், கப்பலில் ஏற்பட்ட துளை காரணமாக, தண்ணீர் உள்ளே புகுந்து கப்பல் மூழ்கி உள்ளது. கப்பல் கடலில் மூழ்கியதும், கூண்டுகளில் இருந்த ஆடுகளும் தண்ணீரில் மூழ்கின. முடிந்த வரை கூண்டுகளை திறக்க கப்பலில் இருந்தவர்கள் முயன்று உள்ளனர். ஆனால் 700 ஆடுகள் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டன. மற்ற ஆடுகள் எல்லாம் நீரில் மூழ்கி இறந்தன. பலியான 15000 ஆடுகள் பிணமாக நீரில் மிதந்து வந்த காட்சி அந்நாட்டு மக்களை உலுக்கியது. அங்கு கடந்த 2 நாட்களாக ஆடுகள் ஒவ்வொன்றாக சடலமாக கரை ஒதுங்கி வருகின்றன. உயிருடன் மீட்கப்பட்ட 700 ஆடுகளும் அதிக தண்ணீர் குடித்துள்ளன. சில ஆடுகள் மோசமான உடல்நிலையில் உள்ளன. இந்த ஆடுகள் நீண்ட காலம் உயிர் வாழாது. அதோடு இதை யாரும் வாங்க முன் வர மாட்டார்கள் என்றும் ஆட்டை ஏற்றுமதி செய்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அந்நாட்டு மக்கள் இடையே இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆடுகள் பலியான சம்பவம், காரணமாக அங்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர். ஆடுகளை பாதுகாப்பற்ற முறையில் கொண்டு சென்றுள்ளனர். பாதுகாப்பற்ற கப்பலில் ஆடுகளை கொண்டு சென்றுள்ளனர் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் புகார் அளித்துள்ளனர். ஆடுகள் இப்படி பலியான சம்பவம் காரணமாக, அந்த கடல் பகுதி மாசு ஏற்பட்டுள்ளதாகவும், சுற்றுசூழல் ரீதியான பாதிப்பை இது ஏற்படுத்தும் என்றும் கடலியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.