எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஜூலை 31 வரை நீதிமன்ற காவல்!

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஜூலை 31-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1 நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டதை அடுத்து அவர் இன்று (ஜூலை 17ம் தேதி) காலை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரில், போலி சான்றிதழ் கொடுத்து மோசடியாக பத்திரப் பதிவு செய்ததாக யுவராஜ், பிரவீண், ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ், ஷோபனா ஆகிய 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் கடந்த மாதம் 9ம் தேதி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கில் தானும் சேர்க்கப்படலாம் என்ற அடிப்படையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த மாதம் 12-ம் தேதி மற்றும் ஜூன் 30-ம் தேதி என இரு முறை முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்த நிலையில் இரு மனுக்களும் தள்ளுப்படி செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் 12-ம் தேதி முதல் விஜயபாஸ்கர் தலைமறைவானார்.

சார்பதிவாளர் அளித்த நில மோசடி புகார் வழக்கு கடந்த மாதம் 14-ம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. நில உரிமையாளர் ஷோபனாவின் தந்தை பிரகாஷ் அளித்த புகாரில் வாங்கல் போலீஸார் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர், பிரவீண் உள்ளிட்ட 13 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் கடந்த 22ம் தேதி வழக்கு பதிவு செய்தனர்.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர் மற்றும் அவரது வீடு, நிறுவனங்களில் கடந்த 5, 7, 11ம் தேதிகளில் சிபிசிஐடி போலீஸார் சோதனை செய்தனர். மேலும் விஜயபாஸ்கர் மனைவி விஜயலட்சுமியிடமும் விசாரணை நடத்தினர். மேலும் ஏராளமானோரிடம் சிபிசிஐடி அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். விஜயபாஸ்கர், அவரது சகோதரர் ஆகியோர் முன் ஜாமீன் கேட்டு கடந்த 15-ம் தேதி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் கடந்த 5 வாரங்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் வழக்கின் முக்கிய நபரான பிரவீண் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கேரளா மாநிலம் திருச்சூரில் நேற்று காலை 6 மணிக்கு கைது செய்து கரூர் திண்ணப்பா நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு மதியம் 2.30 மணிக்கு அழைத்து வந்தனர். இதையடுத்து அங்கு அதிகளவில் அதிமுகவினர் திரண்டதால் போலீஸார் பேரிகார்டுகள் வைத்து சிபிசிஐடி அலுவலகம் உள்ள சாலையில் யாரும் செல்ல முடியாத வகையில் தடுப்புகள் அமைத்தனர். மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

மதியம் 2.30 மணி முதல் தொடர்ந்து விஜயபாஸ்கரிடம் ஆறரை மணி நேரத்திற்கு மேலாக சிபிசிஐடியினர் விசாரணை நடத்திய நிலையில் இரவு 9.15 மணிக்கு மேல் மருத்துவப் பரிசோதனைக்காக எம்.ஆர்.விஜயபாஸ்கரையும், பிரவீணையும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவப் பரிசோதனை செய்தனர்.

பரிசோதனை முடிந்து இரவு 9.45 மணிக்கு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த விஜயபாஸ்கர் செய்தியாளர்களை பார்த்து, “அரசியல் பழி வாங்கும் வழக்கு, சட்ட ரீதியாக சந்திப்பேன்” என்றார். இதையடுத்து ஆவணங்களில் கையெழுத்து பெறுவதற்காக மீண்டும் சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதை அடுத்து இரவு நீதிமன்றத்தில் காத்திருந்த பத்திரிகையாளர்கள் உள்ளிட்டவர்கள் வெளியேற்றப்பட்டு நீதிமன்ற நுழைவாயில் கதவு மூடப்பட்டது. நீதிமன்றம் முன்பு இரவு 9 மணி முதல் ஏராளமான அதிமுகவினர் திரண்டிருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

விஜயபாஸ்கர், பிரவீண் இருவரும் போலீஸ் வாகனத்தில் கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளகத்திற்கு நேற்றிரவு 12.15 மணிக்கு அழைத்து வரப்பட்டு கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் நீதிபதி பரத்குமார் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும் ஜூலை 31-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இன்று (ஜூலை 17-ம் தேதி) அதிகாலை 4.15 மணிக்கு நீதிமன்றத்தில் இருந்து எம்.ஆர்.விஜயபாஸ்கர், பிரவீண் வெளியே அழைத்து வரப்பட்டனர். போலீஸ் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டு விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையிலும், பிரவீண் குளித்தலை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய சென்னையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் பிருத்விராஜையும் கைது செய்துள்ள சிபிசிஐடி போலீஸார், இன்று (புதன்கிழமை) அவரை கரூர் அழைத்து வந்துள்ளனர். கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரில், கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் மகள் ஷோபனா செட்டில்மென்ட் மூலம் அவரது சொத்தை கிரையம் செய்து கொடுப்பதற்காக கடந்த ஏப். 6-ம் தேதி பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தார். சொத்தின் அசல் ஆவணம் சமர்ப்பிக்கப்படாததால் சட்டப்படி அந்த ஆவணப் பதிவு நிலுவையில் வைக்கப்பட்டது.

அதன் பிறகு அசல் ஆவணம் தொலைந்துவிட்டது எனக்கூறி சென்னை வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட சிஎஸ்ஆர் நகலை அளித்தனர். இதைத்தொடர்ந்து அந்த சொத்தானது கடந்த மே 10-ம் தேதி சட்டப்படி கிரையம் செய்யப்பட்டது. அதன் பிறகு ஷோபனாவின் தந்தை பிரகாஷ் போலியான ‘நான்டிரேசபிள்’ சான்றிதழ் கொடுத்து மோசடியாக பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது என மனு அளித்தார்.
இதுகுறித்து நடத்திய விசாரணையில் அப்போதைய வில்லிவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் பிருத்விராஜ் இதுபோன்ற ‘நான்டிரேஷபிள்’ சான்றிதழ் கொடுக்கவில்லை என தெரிவித்திருந்தார். இவர் ஏற்கெனவே கரூர் மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் ஆய்வாளராகப் பணியாற்றியவர்.

இதையடுத்து கரூர் நகர காவல் நிலையத்தில் யுவராஜ், பிரவீண், ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ், ஷோபனா ஆகிய 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு கடந்த மாதம் 14-ம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து கடந்த 5, 7, 11-ம் தேதிகளில் சிபிசிஐடி போலீஸார் கரூரில் பலரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து பத்திரப்பதிவு நடைபெற காரணமான ‘நான்டிரேஷபிள்’ சான்றிதழ் கொடுத்தபோது வில்லிவாக்கம் காவல் ஆய்வாளராக இருந்து தற்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள பிருத்விராஜையும் கைது செய்த சிபிசிஐடி போலீஸார், அவரை கரூர் அழைத்து வந்து தனி இடத்தில் தங்கவைத்துள்ளனர்.