அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு!

அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

அதிமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்தவர் வைகைச் செல்வன். தற்போது அதிமுகவில் இலக்கிய அணிச் செயலாளராகவும், செய்தித் தொடர்பு செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். 2021 சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டார். 2021 தேர்தல் பரப்புரையின் போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேலாக, அதாவது இரவு 10 மணிக்கு மேல் பரப்புரை செய்ததாக வைகைச் செல்வனுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வைகைச் செல்வன் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வைகைச் செல்வன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளாக இந்த வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை” என்று வாதம் வைத்தார்.

காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “வழக்கின் விசாரணை முடிந்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. தாமதமாக தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என விசாரணை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்தார். அத்துடன், அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வனின் மனுவை தள்ளுபடி செய்தும் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் அருப்புக் கோட்டை தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனும், அதிமுக சார்பில் வைகைச் செல்வனும் போட்டியிட்டனர். தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், வைகைச் செல்வனை தோற்கடித்த சாத்தூர் ராமச்சந்திரன் தற்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.