இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு கோத்தபய ராஜபக்சே தான் காரணம்: ரணில்

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு கோத்தபய ராஜபக்சே அரசின் திறமையின்மைதான் காரணம் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்தார்.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்துவரும் இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளதுடன், அவற்றுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அரசுக்கு எதிராக தொடர் போராட்டகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, தலைநகர் கொழும்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது:

2019 இல் தான் பிரதமராக இருந்தபோது இலங்கை பொருளாதாரம் ஆரோக்கியமான நிலையில் இருந்தது. தாம் பிரதமர் அலுவலகத்தை விட்டு வெளியேறியபோது உபரி நிதி போதுமான அளவில் இருந்தது. முந்தைய எங்களது ஆட்சிக் காலத்தில் இதுபோன்ற பொருளாதார நெருக்கடி ஒருபோதும் ஏற்பட்டதில்லை. எங்களது ஆட்சி நடைபெற்றபோது அத்தியாவசியத் தேவைகளுக்காக மக்கள் இப்படி கையேந்தி நின்றதில்லை.

நிதி சவால்களை கையாள்வதில் கோத்தபய ராஜபக்சே அரசின் திறமையின்மையால்தான் நாட்டு மக்கள் தற்போது அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நெருக்கடியில் இருந்து மீள, கோத்தபய அரசு முன்னணி ஏற்றுமதி நிறுவனங்களிடம் கடன் வாங்க முயற்சிக்கிறது, இது நாட்டை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கும். இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்தார்.

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சங்ககரா, சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் இன்று நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் கூறியது:

நாம் தேர்ந்தெடுத்த தலைவர்கள் மோசமான கொள்கைகளை வகுத்துள்ளனர். அத்துடன் மோசமான நிதி நிர்வாகத்தை மேற்கொண்டுள்ளனர். ஆனால் அதைவிட மோசமாக தங்களது சொந்த குடிமக்களையே இந்த உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் கொண்டு வந்ததற்காக கொஞ்சம் கூட வருத்தப்படவில்லை. நாட்டில் நிலவி வரும் நெருக்கடிக்கு உடனடி குறுகிய கால மற்றும் நீண்ட கால தீர்வுகள் தேவை. அதற்கு இதே அரசியல்வாதிகளை வேறு வேறு துறைக்கு மாற்றி பணியமர்த்துவதால் யாருக்கும் எந்தவித பயனும் இல்லை. இதனால் எந்த பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கப்பேவாதில்லை.

இன்று தெருவில் இறங்கி போராடிக் கொண்டிருப்பவர்கள் புதிய தலைமுறை இளைஞர்கள். விவேகத்துடன், உறுதிப்பாடுடன் மற்றும் அச்சமற்ற ஒரு புதிய சமுதாயம் இணைந்து இந்த இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. இலங்கை இந்த நெருக்கடியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, இனவாதம், மதவாதம் அற்ற புதிதாக ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும் என நம்புகிறேன்.

2 கோடி மக்கள் வாழும் நாட்டை, வெறும் 226 எம்பிக்கள் மண்டியிட வைத்துள்ளனர். ஊழலுக்கும், உறவுமுறைகளுக்கும், இலங்கை மக்களின் முதுகில் குடும்ப வம்சத்தை கட்டியெழுப்புவதற்கும் இனி இடமளிக்கக் கூடாது. இவ்வாறு சங்ககரா தெரிவித்தார்.