திமுகவுடன் நெருக்கமாகவும், உண்மையாகவும் இருக்கிறோம்: செல்வப்பெருந்தகை!

திமுகவுடன் நெருக்கமாகவும், உண்மையாகவும் இருக்கிறோம்.அது கட்சியை வலுப்படுத்த தடையாக இருக்காது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கூறினார்.

தூத்துக்குடியில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர்கள் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் எம்எல்ஏ, சி.எஸ்.முரளிதரன் முன்னிலை வகித்தனர். இதில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ பேசியதாவது:-

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை ஒட்டுமொத்த இந்தியாவுக்கான நிதிநிலை அறிக்கையாக பார்க்க முடியவில்லை. அவர்களுக்கு ஆதரவு அளித்துள்ள பிகார், ஆந்திராவுக்கான நிதிநிலை அறிக்கையாகவே உள்ளது. வெள்ள நிவாரணத்துக்காக ரூ.15ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி உள்ளனர். ஆனால், அதில் தமிழகத்தைப் புறக்கணித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியை வலிமை பெறச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், காமராஜர் ஆட்சியை கொண்டுவர வாய்ப்புள்ளது. கட்சியில் கட்டமைப்பை உருவாக்கி, பலப்படுத்தினால்தான் நமது கனவு நிறைவேறும். இண்டியா கூட்டணி இணக்கமாக உள்ளது. திமுகவுடன் நெருக்கமாகவும், உண்மையாகவும் இருக்கிறோம். அதற்காக கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தக்கூடாது என்பது கிடையாது. இதற்காக யாரும் நமக்கு எதிர்ப்பும் தெரிவிக்க முடியாது. கட்சியை வலிமைப்படுத்தினால், இண்டியா கூட்டணி பலம் பெறும். இண்டியா கூட்டணி பலம் பெற்றால், தேசம் வலிமை பெறும். இவ்வாறு அவர் பேசினார்.