லாலுவின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி!

ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்தின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பிகார் மாநிலத்தில் கால்நடைத் தீவன ஊழல் தொடா்புடைய டொரண்டா கருவூல மோசடி வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத், தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும் என்று ராஞ்சியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்றும் அதற்காக சிபிஐ வசம் உள்ள தன்னுடைய பாஸ்போர்ட்டை புதுப்பிக்கத் தர அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த மனு, சிபிஐ நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், லாலுவின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க நீதிமன்றம் அனுமதி அளித்து நாளையே பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விண்ணப்பிக்குமாறு கூறியுள்ளது. இதற்காக லாலுவின் பாஸ்போர்ட்டை அவரிடம் ஒப்படைக்க சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதற்கு சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருவூல மோசடி ஐந்தாவது வழக்கில், டொரண்டா கருவூலத்தில் ரூ.139 கோடி முறைகேடு செய்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், லாலு பிரசாதுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.60 லட்சம் அபராதமும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி தீா்ப்பளித்தது. இந்த வழக்கில் லாலு பிரசாத் யாதவ், கடந்த ஏப்ரல் மாதம் ஜாமின் பெற்றுள்ளார்.