இரண்டாவது கர்ப்பத்தை அறிவித்தார் நடிகை பிரணிதா!

நடிகர் கார்த்தி நடிப்பில் சகுனி திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்த நடிகை பிரணிதா இரண்டாவது முறையாக தான் கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான உதயம் திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் பிரணிதா அறிமுகமானார். அதைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி திரைப்படத்திலும் நடித்திருந்தார். அதற்குப் பிறகு தம்பியோடு மட்டுமல்லாமல் அண்ணன் சூர்யாவோடும் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான மாஸ் திரைப்படத்தில் அப்பா சூர்யா கதாபாத்திரத்திற்கு மனைவியாக பிரணிதா சுபாஷ் நடித்து இருந்தார். அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற “நான் அவள் இல்லை” பாடல் பெரிய அளவில் அவருக்கு பிரபலத்தை கொடுத்தது. ஆனாலும் அழகான தோற்றம் இவருக்கு இருந்தாலும் கார்த்திக் மற்றும் சூர்யாவை தவிர பெரியதாக எந்த முன்னணி நடிகர்களோடும் பிரணிதாவிற்கு நடிப்பதற்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதியாக அவர் நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான “ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்” என்ற படத்தில் நடித்திருந்தார். பிறகு தமிழில் வாய்ப்பு குறைய தொடங்கியதும் பிறமொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பழமொழி திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த பிரணிதா திடீர் திருமணம் செய்து கொண்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் பெங்களூரை சார்ந்த தொழிலதிபர் நிதின் ராஜுவை கடந்த 2021 மே 31 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர். பிறகு இரு வீட்டார் சம்மதத்தோடு இவர்களுடைய திருமணம் எளிமையாக நடைபெற்றது. கொரோனா காலகட்டம் என்பதால் அந்த நேரத்தில் இவர்களுடைய திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் மட்டும்தான் கலந்து கொண்டனர். பிறகு தன்னுடைய கணவரோடு பிரணிதா அதிகமாக புகைப்படங்களை எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி வெளியிட்டு வருகிறார். அதைத்தொடர்ந்து அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தையின் இரண்டாவது பிறந்த நாளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக பிரணிதா கொண்டாடியிருந்தார்.

இந்த நிலையில் தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதை இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து இருக்கிறார். அதில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு “இரண்டாவது சுற்று.. இந்த பேண்ட் மீண்டும் எனக்கு சேராமல் போய்விட்டது” என்று அதில் குறிப்பிட்டு இருக்கிறார். இதற்கு அதிகமான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.