செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை ஆக.5க்கு ஒத்திவைப்பு!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி இப்போது சிறையில் இருக்கிறார். அவரது ஜாமீன் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வர இருந்தது. இருப்பினும், வழக்கு பட்டியலிடப்படாத நிலையில், வழக்கு விசாரணை ஆக. 5ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் இப்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த ஓராண்டிற்கு மேலாகச் சிறையில் இருக்கிறார். ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுக்களை இதுவரை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளன. மேலும், அவருக்கான நீதிமன்ற காவலையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தொடர்ந்து நீட்டித்து வருகிறது.

இதற்கிடையே அவர் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மீண்டும் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு வந்தது. முன்னதாக விசாரணையின் போது கைப்பற்றியதாகச் சொல்லப்படும் பென் டிரைவிற்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று செந்தில் பாலாஜி தரப்பில் சொல்லப்பட்டது. இதற்கிடையே நேற்றைய விசாரணையில் இது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பென் டிரைவ் கைப்பற்றப்பட்டதில் தனது பங்களிப்பு இல்லை என்று செந்தில் பாலாஜி கூறுவதை ஏற்க முடியாது என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், “செந்தில் பாலாஜி வழக்கில் கைப்பற்றப்பட்ட பென் டிரைவ் போன்ற ஆவணங்கள் எங்கே? இந்த சாதாரண கேள்விக்கு அமலாக்கத்துறையிடம் இருந்து பதில் இல்லை.. கைப்பற்றப்பட்ட பென் டிரைவில் கூடுதல் ஆவணம் எப்படி வந்தது? சோதனையின் போது பென் டிரைவில் குறிப்பிட்ட தரவுகள் இல்லை என்று செந்தில் பாலாஜி தரப்பு கூறுகிறதே” எனக் கேள்வி எழுப்பினர். டிஜிட்டல் ஆவணங்களில் செந்தில் பாலாஜி தொடர்புடைய விவரங்கள் எதில் இடம்பெற்று இருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தச் சொன்ன நீதிபதிகள், இந்த கேள்விக்குப் பதில் அளிக்காமல் இருப்பது ஏன் என்றும் இது மிக மிகச் சாதாரண கேள்வி என்றும் தெரிவித்தனர். மேலும், நேரடியான பதிலை எதிர்பார்ப்பதாகவும் நீதிபதிகள் கேட்டனர். இருப்பினும், இதற்கு அமலாக்கத் துறை தரப்பில் உரியப் பதிலை அளிக்கவில்லை. இதையடுத்து இன்று பதில் வழங்க முடியவில்லை என்றால் வழக்கை நாளை தள்ளி வைப்பதாக கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வர இருந்தது. இன்று ஜூலை 25ம் தேதி மாலை 3 மணிக்கு விசாரிப்பதாக நீதிபதிகள் கூறியிருந்தனர். இருப்பினும், அந்த வழக்கு இன்று பட்டியலிடப்படவில்லை. இதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பினர் இது தொடர்பாக நீதிபதிகளிடம் முறையீடு செய்தனர். அதை கேட்ட நீதிபதிகள் வழக்கை ஆக. 5ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக மட்டும் தெரிவித்தனர். ஆகஸ்ட் 5ம் தேதிக்கு 10 நாட்களுக்கு மேல் இருப்பதால் வழக்கை இன்று அல்லது நாளை விசாரிக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை விடுத்தது. இருப்பினும், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் இதை ஏற்க மறுத்துவிட்டனர். அடுத்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் லோக் அதாலத் நடப்பதால் மதிய நேரம் இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்ற நீதிபதிகள் ஆக. 5ம் தேதி விசாரிப்பதாக தெரிவித்தனர். மேலும், 5ம் தேதிக்கு மிக பெரிய காலஇடைவெளி இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.