என்னை எருமை மாடுமீது ஏற்றி சூட்டிங்கை மேற்கொண்டனர்: மாளவிகா மோகனன்!

நடிகர் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது படத்தின் நாயகிகள் மாளவிகா மோகனன் மற்றும் பார்வதி திருவோத்து உள்ளிட்டவர்கள் படம் குறித்தும் இயக்குனர் பா ரஞ்சித் குறித்தும் அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகின்றனர்.

நடிகர் விக்ரம் -இயக்குனர் பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தங்கலான். சுதந்திர காலகட்டத்தில் கேஜிஎப் பகுதியில் வாழ்ந்த தமிழக மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு தங்கலான் படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் விக்ரம் இருவேறு கெட்டப்புகளில் வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார். முன்னதாக படத்தின் போஸ்டர்கள், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி மாஸ் காட்டியுள்ளது. படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். படத்தில் விக்ரமுடன் இணைந்து மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டிலேயே நிறைவடைந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது

இந்நிலையில் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டமாக படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். தென்னிந்திய மாநிலங்கள், மும்பை, வெளிநாடுகளில் படத்தின் பிரமோஷன்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இதேபோல ஆகஸ்ட் 2ம் தேதி படத்தின் இசை வெளியீடு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் நாயகிகளாக நடித்துள்ள மாளவிகா மோகனன் மற்றும் பார்வதி உள்ளிட்டவர்கள் படம் குறித்தும் இயக்குனர் பா ரஞ்சித் குறித்தும் தங்களது மகிழ்ச்சிகளை பேட்டி மூலம் பகிர்ந்து கொண்டுள்ளனர். ஒரு நாள் திடீரென எருமை மாடு ஒன்றை அழைத்து வந்து தனக்கு பா ரஞ்சித் காட்டியதாகவும் அது குறித்து தான் உற்சாகப்பட்டதாகவும் கூறிய மாளவிகா, தொடர்ந்து எருமை மாடு மீது ஏறும்படி பா ரஞ்சித் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் தான் மிகவும் அதிர்ச்சியுடன் இயக்குனரை பார்த்ததாகவும் ஆனால் அவர் தான் உண்மையாகவே இந்த விஷயத்தை கூறியதாக தெரிவித்து தன்னை எருமை மாடுமீது ஏற்றி சூட்டிங்கை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த காட்சி படத்தில் மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளதாகவும் மாளவிகா குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே அவருடன் இணைந்து பேட்டியளித்த பார்வதி, பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கேரக்டர்களை பா ரஞ்சித் உருவாக்கி வருவதாகவும், பெண்களால் எதுவும் சாத்தியப்படும் என்ற நம்பிக்கையை அவர் கொண்டுள்ளதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார். படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவரும் என்றும் அவர்கள் கூட்டாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இன்னும் சில தினங்களில் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளை படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.