எல்லா வகையிலும், தமிழக மக்களும், தமிழகமும் பாதிக்கப்பட்டுள்ளது: பிரேமலதா விஜயகாந்த்!

“தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு மிகப் பெரிய ஒரு கேள்வியாக உள்ளது. மக்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை. இது கண்டிக்கத்தக்க ஒரு விஷயம். இன்று எல்லா வகையிலும், தமிழக மக்களும், தமிழகமும் பாதிக்கப்பட்டுள்ளது” என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

மின கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. பூந்தமல்லி பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டார். ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன முழுக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:-

மின் கட்டண உயர்வு, ரேஷன் பொருட்களில் அத்தியாவசமான பாமாயில், பருப்பு வகைகள் மக்களுக்கு இன்று வரை கிடைக்காதது, அதேபோல், காவிரியில் நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை, திமுக அரசு கூட்டணியில் இருந்தாலும், காங்கிரஸ் கட்சியிடம் இருந்து நமக்கு பெற்றுத்தரவில்லை என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திதான், தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் இன்று நடைபெற்றது.

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு மிகப் பெரிய ஒரு கேள்வியாக உள்ளது. மக்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை. இது கண்டிக்கத்தக்க ஒரு விஷயம். இன்று எல்லா வகையிலும், தமிழக மக்களும், தமிழகமும் பாதிக்கப்பட்டுள்ளது. முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வகையில், இங்கு எதுவுமே நடக்காதது போல, நல்லாட்சி நடைபெறுவது போன்று ஒரு தோற்றத்தை உருவாக்கி, பொய்யாக பேசிக்கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறார். மக்கள் அனைவரும் இதை பார்த்துக்கொண்டுதான் உள்ளனர். இது ஒரு தவறான விஷயம் .

அதுமட்டுமல்ல, ஒரு முதல்வர் எப்படி இருக்க வேண்டும். வேட்டியும் சட்டையும் அணிய வேண்டும். அதுதான் அடையாளம். ஆனால், முதல்வர் பேன்ட் சட்டை அணிந்து வருகிறார். காரணம், அவரால் நடக்க முடியவில்லை. கைகளில் உதறல் இருக்கிறது. முதல்வர் மிகப் பெரிய உடல்நிலை பாதிப்பில் இருக்கிறார். அது வெளியே தெரியக் கூடாது என்பதற்காகத்தான் பேன்ட் சட்டை அணிந்துகொண்டும், கை உதறுவதை மறைப்பதற்காக, கைகளை பேன்ட் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொள்கிறார்.

முதல்வர் நல்ல உடல்நிலை ஆரோக்கியத்துடன் இருந்தால்தான், மக்களுக்கு நன்மை செய்ய முடியும். எனவே, திமுகவில் உள்ள மூத்த அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வர் பதவியை வழங்க வேண்டும் தேமுதிக சார்பாக கேட்டுக்கொள்கிறோம். அதேபோல், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் யார் உண்மையான குற்றவாளியோ, அதை வெளியே கொண்டு வந்து நியாயத்தை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையில் ஏராளமானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மின்விசிறி, மிக்ஸி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், டிவி உள்ளிட்ட மின் சாதனங்களுக்கு மாலை அணிவித்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து எல்.கே.சுதீஷ் பேசியதாவது:-

திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் 3 முறை மின் கட்டணத்தை உயர்த்திவிட்டது. எஞ்சிய 2 ஆண்டுகளிலும் மின் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளனர். இதனால் பொது மக்கள் தான் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் தட்டுப்பாடு நிலவுகிறது. அதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரியில் தண்ணீர் வராமல் தவித்து வருகின்றனர்.

இண்டியா கூட்டணியில் இருந்து கொண்டு திமுகவால் தண்ணீரைக் கேட்டுப் பெற முடியவில்லை. தேர்தலின்போது மட்டும் பொய்யான வாக்குறுதிகள் மூலம் மக்களை ஏமாற்றுகின்றனர். மத்திய பட்ஜெட்டில் பிகாருக்கும், ஆந்திராவுக்கும் நிதி அள்ளி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், நமக்கு நிதி கொடுக்கவில்லை. அதற்கு காரணமும் தமிழக அரசுதான். பிரதமர் மோடியை நேரில் சந்தித்து நமக்கு தேவையான நிதியை கேட்டுப்பெற முயற்சி எடுக்க வேண்டும்.

இந்தியாவிலேயே முன்பு தமிழகம்தான் சிறந்த மாநிலமாக இருந்தது. ஆனால், தற்போது எங்கு பார்த்தாலும் கொலை, கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை என சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டு போய்விட்டது. இதற்குக் காரணம், தமிழகத்தை ஆளும் ஆட்சியாளர்கள்தான். அவர்களுக்கு மக்களை பற்றி கவலை இல்லை. அதேபோல் தமிழக மக்களும் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை மதிக்காமல் தக்க பாடம் புகட்டுவார்கள். அப்போது தேமுதிக – அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.