உயிர்காக்கும் மருத்துவர்களை உருவாக்குவதற்கு பொதுத்தேர்வு அவசியம்: சரத்குமார்!

2010ல் மத்தியில் நீட் தேர்வை கொண்டு வர காரணமாக இருந்தவர்களுடன் கூட்டணியில் இருந்து கொண்டு, தற்போது அதனை ரத்து செய்ய வலியுறுத்துகிறார்கள் எனவும், ஆண்டுதோறும் நீட் தேர்வு வரும் சமயத்தில் கண்துடைப்பு அரசியல் நாடகங்களாக இது போன்று தீர்மானங்கள் நிறைவேற்றுகிறார்கள் என ‘இந்தியா’ கூட்டணி கட்சியினரை பாஜக பிரமுகரும், நடிகருமான சரத்குமார் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தலைமையில் ஆட்சி நடக்கும் தமிழ்நாடு, கர்நாடகா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநில சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றுவது, மருத்துவப்படிப்பில் நீட் பொதுத்தேர்வின் முக்கியத்துவத்தை புறக்கணிப்பதுடன், திறமையான, தரம்வாய்ந்த மருத்துவர்கள் உருவாக்கத்தை தவிர்ப்பதாக உள்ளது. 2010 – இல் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் கொண்டு வந்த நீட் தேர்வுக்கு, மத்திய, மாநில அரசுகளின் பாடத்திட்ட வேறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் விலக்கு கோரியது நியாயமானதாக இருப்பினும், இன்றைய காலக்கட்டத்தில் 2024 ஆம் ஆண்டில் அனைத்துப் போட்டி தேர்வுகளுக்கும் மாணவர்களை தயார்படுத்தும் நோக்கத்தில் மாநில பாடத்திட்டத்திங்கள், மத்திய பாடத்திட்டங்களுக்கு இணையாக அமைக்கப்பட்டுள்ளன.

இனியும் நீட் தேர்வுக்கு விலக்கு கோருவது என்பது, தனியார் மருத்துவக்கல்லூரிகளின் வியாபார நோக்கத்திற்காக, செய்யும் அரசியல் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 2010ல் மத்தியில் நீட் தேர்வை கொண்டு வர காரணமாக இருந்தவர்களுடன் கூட்டணியில் இருந்து கொண்டு, தற்போது அதனை ரத்து செய்ய வலியுறுத்துகிறார்கள். ஆண்டுதோறும் நீட் தேர்வு வரும் சமயத்தில் கண்துடைப்பு அரசியல் நாடகங்களாக இது போன்று தீர்மானங்கள் நிறைவேற்றுகிறார்கள். உண்மையில், தமிழ்நாட்டு மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தில் ஆண்டுதோறும் முன்னேற்றம் காண்கிறார்கள். உதாரணத்திற்கு 2018 இல் 39.56% ஆகவும், 2019 இல் 48.5% ஆகவும், 2020 இல் 57.44% ஆகவும் வளர்ச்சி கண்டிருக்கிறார்கள். மேலும், போட்டித்தேர்வு எனும் போது, தற்போது 15 லட்சம் மாணவர்கள் எழுதும் தேர்வானது அடுத்த சில வருடங்களில் இரண்டு, மூன்று மடங்கு அதிகரிக்கச் செய்யுமே தவிர, குறைய வாய்ப்பில்லை என்பது அனைவரும் அறிந்ததே.

TANCET (Tamil nadu Common Entrance Test), TNTET, SLET (State Level Eligibility Test), TNUSRB (Tamil nadu Uniformed Services Recruitment Board) நடத்தும் தேர்வுகள் உட்பட பல பொது நுழைவுத் தேர்வுகளை நடத்தி ஆசிரியர், காவலர், பொறியாளர் என தொழில்முறை கல்வியாளர்களை குறிப்பிட்டு தேர்வு செய்து உருவாக்கும் தமிழ்நாடு அரசு, சிறந்த மருத்துவரை தேர்வு செய்வதற்காக நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வை மட்டும் வேண்டாமென புறக்கணிப்பதன் பின்னணி என்ன? நீட் பொதுத்தேர்வு வேண்டாமென்றால் பிற துறைகளில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளையும் மாநில அரசு புறக்கணிக்குமா?

தனியார் துறைகளில் சாதாரண பணிகளில் நியமனம் செய்வதற்கு கூட, அடிப்படை கல்வித்தகுதியுடன் பல சுற்றுகள் தேர்வு வைத்து திறமையை நிரூபிப்பவர்களை பணிக்கு அமர்த்துகிறார்கள். அப்படி இருக்கையில் வளர்ந்து வரும் மக்கள் தொகை பெருக்கம், சுற்றுச்சூழல் மற்றும் நோய்த்தாக்கத்தை சவாலுடன் எதிர்கொள்ள வேண்டிய உயிர்காக்கும் மருத்துவர்களை உருவாக்குவதற்கு பொதுத்தேர்வு அவசியம் என தமிழக அரசும், இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்து ஆட்சி செய்யும் பிற மாநிலங்களைச் சார்ந்தவர்களும் உணர வேண்டும். அனைத்து துறைகளிலும் வளர்ச்சி என்பது தவிர்க்க முடியாதது. அதுபோன்று, தரமான கல்வி, தரமான மருத்துவத்திற்காக உருவாக்கப்பட்ட பொதுத்தேர்வை எதிர்கொள்ள நம் மாணவர்களை தயார்படுத்துவதே சாலச்சிறந்தது என கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.