பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்படவில்லை: அண்ணாமலை!

மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களுக்கான முக்கியத்துவம் அல்லது நிதி உரிய வகையில் ஒதுக்கப்படவில்லை என கூறுவது அரசியல் சார்ந்த கருத்தாகும் என்று அண்ணாமலை கூறினார்.

கோவையில் மத்திய பட்ஜெட் தொடர்பாக நேற்று சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-

தமிழக அரசு மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதில்லை. மத்திய அரசு மீது தொடர்ந்து பழி சுமத்தி வருகிறது. மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளில் ஒரு மரத்தை அகற்றுவதற்கு தமிழக அரசு 8 மாத காலம் இழுத்தடித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநில அரசு இந்த அளவுக்கு பொறுப்பற்று செயல்பட்டால் திட்டங்களை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்படும். இதனால் வளர்ச்சி பணிகள் பெரிதும் பாதிக்கப்படும்.

மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களுக்கான முக்கியத்துவம் அல்லது நிதி உரிய வகையில் ஒதுக்கப்படவில்லை என கூறுவது அரசியல் சார்ந்த கருத்தாகும். பட்ஜெட் பணிகளை மேற்கொள்ளும் மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள நிதி செயலாளர்கள் கலந்து ஆலோசித்து தான் நிதி பங்கீடுகளை மேற்கொள்கின்றனர். அவர்களிடத்தில் எந்த குழப்பமும் இல்லை. தமிழகம் எந்த விதத்திலும் புறக்கணிக்கப்படவில்லை. கடந்த ஆண்டுகளை விட அதிக அளவு தமிழக்கத்துக்கு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை. இவ்வாறு அவர் கூறினார்.