அமெரிக்க சுகாதார மந்திரிக்கு மீண்டும் கொரோனா!

அமெரிக்க சுகாதார மந்திரிக்கு ஒரு மாதத்துக்குள் 2-வது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தில் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் மந்திரியாக இருந்து வருபவர் சேவியர் பெசெரா. 64 வயதான இவர், கடந்த மாத மத்தியில் ஜெர்மனிக்கு சென்று திரும்பிய நிலையில் கொரோனா தொற்றுக்கு ஆளானார். பூஸ்டர் உள்பட கொரோனா தடுப்பூசியின் 3 டோஸ்களை செலுத்திக்கொண்ட போதும் அவரை வைரஸ் தாக்கியது. அதை தொடர்ந்து, தன்னை தானை தனிமைப்படுத்தி கொண்ட நிலையில், தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வந்து பணிக்கு திரும்பினார்.

இந்த நிலையில் தற்போது சேவியர் பெசெராவுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று காலை வழக்கமான பரிசோதனை செய்தபோது தொற்று பாதிப்பு உறுதியானதாகவும், அவருக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகவும் அவரது செய்தி தொடர்பாளர் கூறினார்.