வயநாடு நிலச்சரிவு துயரச் செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன்: நடிகர் விஜய்!

“வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறேன்” என நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு துயரச் செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக பிரார்த்திப்பதுடன் இந்நேரத்தில் அவர்களுடன் துணை நிற்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் வழங்க அரசு அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழப்பு 73 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், பாலம் சேதம் அடைந்துள்ளதாலும் மீட்புப் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் 100-க்கும் மேற்பட்ட மக்கள் சிக்கித் தவிப்பதாகத் தெரிகிறது. அதேபோல் சூரல்மலா பகுதியில் பலரது நிலை என்னவானது என்று தெரியாத சூழலே நிலவுகிறது. பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 949790 0402, 0471 2721566 ஆகிய உதவி எண்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.