இந்து மதத்தை தொடர்ந்து அவமதிப்பதை திமுக வாடிக்கையாகக் கொண்டுள்ளது: வானதி சீனிவாசன்!

ராமரையும் இந்து மதத்தையும் தொடர்ந்து அவமதிப்பதை வாடிக்கையாகக் கொண்ட திமுக தலைவர்களின் வரிசையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரும் இணைந்துள்ளார் என கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வானதி சீனிவாசன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

நமது இந்து மதத்தினரையும், நாம் போற்றி வணங்கும் இந்துமதக் கடவுள்களையும் தொடர்ந்து அவமதிப்பதுதான் திமுகவின் முதன்மைக் கொள்கை. இராமபிரானையும் இந்துமதத்தையும் தொடர்ந்து அவமதிப்பதை வாடிக்கையாகக் கொண்ட அறிவாலய தலைவர்களின் வரிசையில், இன்று திமுக-வின் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. சிவசங்கர் அவர்களும் இணைந்துள்ளார். காரணம், சோழர்களின் வரலாற்றை புகழ்ந்து பேசும் திமுக அமைச்சர் திரு. சிவசங்கர் அவர்களுக்கு, சோழர்கள் இராமபிரானை தங்களின் முன்னோராக வணங்கி வழிபட்ட உண்மை தெரியாமல் போனது ஆச்சரியம்தான். அமைச்சர் திரு. சிவசங்கர் அவர்களுக்கு இராமபிரானின் வரலாறு மட்டுமல்ல, சோழர்களின் உண்மையான பின்னணியும் வரலாறும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இல்லையெனில், இராமபிரானை திருமாலின் அவதாரமாக போற்றி, கங்கையும் இமயமும் நம்முடையது என்று ஒற்றைப் பாரத கனவு கண்ட சோழர்களைப் பற்றி அவர் புகழ்ந்திருக்க மாட்டாரோ என்னவோ.

இராமபிரானின் வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கவில்லை என்று கூறும் திமுக-வின் போக்குவரத்துத் துறை அமைச்சர், சில நாட்களுக்கு முன்பு “திராவிட மாடலின் முன்னோடியே இராமர் தான்” என்று இராமபிரானின் துதிப் பாடிய திமுக-வின் சட்டத்துறை அமைச்சர் திரு. ரகுபதி அவர்களையும், “சென்னையைக் காத்த இராமர் எங்கள் தமிழக முதல்வர்” என்று இராமபிரானை மேற்கோள் காட்டிப் புகழ்ந்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் திரு. சேகர்பாபு அவர்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டு பேசுவதுதான் சாலச் சிறந்தது.

வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம், இந்து மதத்தினரின் நம்பிக்கை மீது திராவிடக் கொள்கை என்ற திராவகத்தை ஊற்றி, இந்துக்களின் நம்பிக்கையின் வேர்களைப் பொசுக்க முயற்சிக்கும் திமுக-வின் வெறுப்பரசியலுக்கு, தமிழக மக்கள் அடுத்து வரும் தேர்தலில் தக்க பாடத்தை புகட்டுவார்கள். காரணம், இராமபிரானின் வரலாறு நேர்மையையும் ஒழுக்கத்தையும் போற்றும் ஒவ்வொரு தமிழரின் மனதிலும் அழியாத்தடமாக பதிந்துள்ளது என்பதுதான் யாவரும் அறிந்த உண்மை. ஆகவே, இந்துக்களின் மனதைப் புண்படுத்தியமைக்கு திமுக அமைச்சர் திரு. சிவசங்கர் அவர்கள், உடனடியாக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்பதுதான் நாகரிகம் ஆகும். இவ்வாறு வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

முன்னதாக அரியலூரில் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. அப்போது அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், ராஜேந்திர சோழன் ஆட்சி செய்ததற்கான கல்வெட்டுகளை ஆதாரமாக வைத்து அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ராஜேந்திர சோழனுக்கு மூன்றாயிரம் ஆண்டுகால வரலாறு உண்டு. ஆனால், ராமர் இருந்ததற்கான வரலாறும் கிடையாது. ஆதாரமும் கிடையாது. ராமரைப் பற்றி பேசுபவர்கள்கூட அவரை அவதாரம் என்றுதான் கூறுகின்றனர். அவதாரம் என்றால் பிறக்க முடியாது. கடவுளாக பிறந்துவிட்டால் அவதாரமாக இருக்க முடியாது. நமது வரலாற்றை மறைத்து, நம்மை மயக்கி வேறு ஒரு வரலாற்றை உயர்த்திக் காட்டுவதற்காக இந்த செயலை எல்லாம் செய்கின்றனர். ராஜேந்திர சோழன் ஆட்சி செய்ததற்கான கோயில்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆதாரமாக உள்ளன. ராஜேந்திர சோழனை கொண்டாடாவிட்டால் வரலாறு இல்லாதவர்களை நம் தலையில் கட்டிவிடுவார்கள் என்று பேசினார். இது பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது. அது போல் திமுகவை சேர்ந்த அமைச்சர் ரகுபதி அண்மையில் திராவிட மாடல் ஆட்சிக்கு முன்னோடி ராமர் ஆட்சிதான் என கூறியிருந்த நிலையில் அமைச்சர் சிவசங்கரின் இந்த பேச்சு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.