பிரசாந்தை போலீசில் சிக்க வைத்ததே பிரியா ஆனந்த்!

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் தொகுப்பாளினியுடன் பயணித்த நடிகர் பிரசாந்த்துக்கு சென்னை போலீசார் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர். இது பெரும் பேசும் பொருளா நிலையில் பிரசாந்தை போலீசில் சிக்க வைத்ததே நடிகை பிரியா ஆனந்த் தான் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் பிரசாந்த் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். அதன்பிறகு அவர் திரையுலகை விட்டு ஒதுங்கி இருந்தார். தற்போது மீண்டும் அவர் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். நடிகர் விஜயுடன் ‛தி கோட்’ திரைப்படத்தில் நடிகர் பிரசாந்த் நடித்துள்ளார். அதேபோல் ‛அந்தகன்’ என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் பிரசாந்துடன், பிரியா ஆனந்த், சிம்ரன், கார்த்திக், கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ஊர்வசி என பலரும் நடித்துள்ளனர். இதில் ‛அந்தகன்’ திரைப்படம் வரும் 9 ம் தேதி திரையரங்குகளில் திரைப்படம் வெளியாகிறது.

இத்தகைய சூழலில் தான் நடிகர் பிரசாந்த் சர்ச்சையில் சிக்கினார். அதாவது ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்றதால் அவருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதாவது ‛அந்தகன்’ திரைப்படம் 9 ம் தேதி ரிலீசாக தயாராக உள்ள நிலையில் அதனை புரோமோட் செய்யும் பணியில் தற்போது நடிகர் பிரசாந்த் மற்றும் படக்குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு நடிகர் பிரசாந்த் மற்றும் நடிகை பிரியா ஆனந்த் ஆகியோர் பேட்டியளித்தனர். அப்போது பிரசாந்த் பேட்டியின் ஒருபகுதியாக பெண் தொகுப்பாளினியுடன் தி நகரில் பைக்கில் ரைட் சென்று பேட்டியளித்தார். அப்போது அவர்கள் 2 பேரும் ஹெல்மெட் அணியவில்லை. இதையடுத்து அவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தான் பிரசாந்தை போலீசில் சிக்க வைத்ததே அவருடன் ‛அந்தகன்’ படத்தில் நடித்துள்ள நடிகை பிரியா ஆனந்த் தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தபோது Truth or Dare வைக்கப்பட்டது. இதில் பிரியா ஆனந்த், பிரசாந்துக்கு ‛டேர்’ கொடுத்ததை தொடர்ந்து தான் நடிகர் பிரசாந்த், தொகுப்பாளினியுடன் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்று அபராதம் செலுத்தி உள்ளார். இதனை சமீபத்தில் நடிகை பிரியா ஆனந்தே பகிர்ந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் நடந்த பட புரோமோஷன் நிகழ்ச்சியில் பிரசாந்த் உடன், பிரியா ஆனந்த் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர் நடிகர் பிரசாந்திடம், ஹெல்மெட் அணியாமல் சென்று ஃபைன் கட்டியது தொடர்பான கேள்வியை எழுப்பினார். அப்போது குறுக்கிட்ட பிரியா ஆனந்த், ‛‛ஐயோ நான்தான் அவரை டேர் செய்திருந்தேன். இதனால் எனக்கும் Guilty ஃபிலிங் இருக்கிறது” என்று கூறினார். அப்போது பிரியா ஆனந்தை நடிகர் பிரசாந்த் தடுத்த வீடியோ வெளியாகி பரவி வருகிறது.