நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சொந்த ஊருக்கு அருகிலேயே மையத்தை ஒதுக்க வேண்டும்: முத்தரசன்

முதுநிலை நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சொந்த ஊருக்கு அருகிலேயே மையத்தை ஒதுக்க வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

முதுநிலை நீட் தேர்வு ஜூன் 23ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்வுக்கு 12 மணி நேரம் முன்னர் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இளநிலை நீட் தேர்வுகளில் முறைகேடுகள் பூதாகரமாக வெடித்த நிலையில், தேர்வு தள்ளிவைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஒத்திவைக்கப்பட்ட நீட் தேர்வு வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட் வரும் 8ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இதற்கான தேர்வு மைய ஒதுக்கீடு விவரம் கடந்த ஜூலை 31ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில், தமிழகத்தைச் சேர்ந்த நீட் தேர்வர்களுக்கு ஆந்திராவில் ஏதோ ஒரு ஊரகப் பகுதியில் மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. உடனடியாக தமிழகத்திற்கு மையத்தை மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் முளைத்துள்ளன.

இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

நீட் தேர்வுகளுக்கு ஆயத்தமாவது மட்டுமின்றி, தேர்வு மையங்களுக்குச் செல்வது, உள்ளே நுழைவது என அனைத்திலும் தேவையற்ற தடைகள் ஏற்படுத்தப்படுவது கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே கடந்த ஜூன் 23 ஆம் நாளில், தேர்வு எழுத ஆயத்தமாக மையத்துக்கு மாணவர்கள் வந்த பின்னும், தேர்வு ரத்து செய்யப்பட்டது. இப்போது, ஆகஸ்ட் 11ஆம் தேதி காலையும், மாலையும் தேர்வு வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவர்கள் விருப்பம் தெரிவித்திருந்த தேர்வு மையங்களை விட்டு விட்டு, வேற்று மாநிலங்களில், ஐநூறு கிலோ மீட்டர், ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்கள், ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களுக்கு தேர்வு எழுதச் செல்ல வேண்டி இருக்கிறது. மற்ற மாநிலங்களைச் சார்ந்தவர்களுக்கும் இதே நிலைதான். சுமார் இரண்டு லட்சம் தேர்வர்கள் இந்தத் தேர்வை எழுத இருக்கிறார்கள். குறைந்த கால அவகாசத்தில், வழக்கமான போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்த முடியாமல், பெரும் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் தேர்வர்கள் தள்ளப்பட்டுள்ளனர். பெரும் பொருட்செலவு, மனச்சோர்வு ஆகியவற்றால் தேர்வர்கள் அவதியுறுகிறார்கள். நல்ல மனநலம் கொண்டவர்களால், தேர்வர்களை பொருளில்லாமல் அலைக்கழிக்கும் வகையில் இப்படி ஒரு முடிவை எடுக்க முடியாது. பெரும் பண வசதி இருந்தால் மட்டுமே இந்தத் தேர்வுகளை எழுத முடியும் என்று ஒவ்வொரு அசைவிலும் தேர்வாணையம் நிரூபித்து வருகிறது. எனவே தேர்வு எழுதும் மாணவர்கள் விருப்பம் தெரிவித்த மையங்களிலோ, அல்லது அவர்கள் வாழும் மாவட்டங்கள் அல்லது அருகில் உள்ள மாவட்டங்களிலோ அவர்களுக்கு தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.