காணாமல் போன மீனவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

காணாமல் போன மீனவரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 1-ந்தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படையின் ரோந்து படகு மோதியது. இதில் விசைப்படகு சேதமடைந்து நீரில் மூழ்கியதில், மலைச்சாமி என்ற மீனவர் உயிரிழந்தார். மேலும் ராமச்சந்திரன் என்ற மீனவர் காணாமல் போன நிலையில், அவரை கடலோர காவல் படையினர் தேடி வந்தனர். அதே சமயம் முத்து முனியாண்டி, மூக்கையா ஆகிய இருவர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்த நிலையில், கடந்த 5 நாட்களாக தேடியும் காணாமல் போன மீனவர் ராம்ச்சந்திரனின் உடல் கிடைக்காத நிலையில், அவரது குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து, ரூ.10 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார்.