டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகளை தடுக்க வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி!

வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியை எதிர்த்து மெகா கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டியில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது அவர் கூறியதாவது:-

திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல் தமிழகத்தில் வளர்ச்சிப்பணிகள் எதுவும் நடைபெறவில்லை, தமிழகத்தில் அமைதியில்லை, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து காணப்படுகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக சட்டம் – ஒழுங்கு மிகப்பெரிய அளவுக்கு சீர்குலைந்து, அனைத்து மாவட்டங்களிலும் எதாவது ஒரு இடத்தில் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதற்கு காரணம் மது, போதை தான் காரணம். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும், படிப்படியாக மதுக்கடைகள் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்தது மட்டுமின்றி, பூரண மது விலக்கு கோரி திமுக போராட்டம் நடத்தியது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை, டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மட்டுமின்றி தனியார் பார்களும் அதிகரித்துள்ளது. இன்றைக்கு ஏராளமான மக்கள் மதுவிற்கு அடிமையாகி உள்ளனர். மேலும் அதிக கொலைகள் நடக்க காரணம் மது தான். அது மட்டுமின்றி கிராமங்கள் வரை கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. மேலும், கிராமப்புறங்களிலும் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. இனியாவது விழித்துக் கொண்டு தமிழக அரசு சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்.

திமுகவின் அருந்ததியர் இட உள் ஒதுக்கீடு திட்டத்தின் காரணமாக கடந்த 14 வருடங்களில் மிகப் பெரிய சமுதாயங்களான தேவேந்திர குலவேளாளரும், ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 1.5 கோடி பேரும் பாதிப்படைந்துள்ளனர். இதைவிட சமூக அநீதி இந்த நூற்றாண்டில் வேறு எதுவுமே கிடையாது.. இதுகுறித்து எந்தவொரு அரசியல் கட்சியும் உண்மைத்தன்மையை அறியாமல் எந்திரத்தனமாக உள் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு என அறிக்கை தருகிறார்கள்.. தமிழ்நாடு அரசு, இந்திய அரசியல் சாசனத்தால் தேவேந்திர குலவேளாளருக்கும், ஆதிதிராவிடர்களுக்கும் அதில் உள்ள 76 சாதிகளுக்கும் வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை பறித்து மற்றவர்களுக்கு வழங்குகிறது. அவர்களுக்கு 3 சதவீதம் கொடுப்பதை பற்றி எந்தவித ஆட்சேபணையும் கிடையாது. ஆனால், இடஒதுக்கீட்டை அமலாக்கிய முறை தவறானது. இதுகுறித்து சென்னையில், பாதிக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களின் கூட்டத்தை நடத்த உள்ளோம்.

சென்னையில் உள்ள பல ஐஏஎஸ் அகாடமிகளில் இப்போது பதவியில் உள்ள அதிகாரிகள் அல்லது ஓய்வுபெற்ற அதிகாரிகளால் நடத்தப்படுகின்றன. அதனால் குரூப் 1, குரூப் 2 போன்ற பதவிகளுக்கு வினாத்தாள்கள் நிச்சயமாக அந்த மையங்களில் இருந்து தான் வெளியாகிறது. அந்த மையங்களில் படிக்கிறவர்கள் தான் வேலை வாய்ப்புக்கு செல்கிறார்கள்.. இப்படிப்பட்ட மிகப்பெரிய முறைகேடு, கடந்த 10 வருடத்துக்கும் மேலாக நடந்து கொண்டிருக்கிறது. அதனால், அடுத்தவர்களை குறை சொல்வதற்கு முன்பு, டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகளை தடுக்க வேண்டும்.

புதிய தமிழகம் கட்சி தேர்தல் மூலமாக மட்டுமே சமுதாய மாற்றத்தை உருவாக்க வேண்டுமென உருவாக்கப்பட்ட கட்சி கிடையாது. தேர்தல் என்பது ஒரு களம். சட்டமன்றங்கள், நாடாளுமன்றங்களில் எல்லோருக்கமான குரல் இருக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் அதில் பங்கேற்கிறோம். அரசியல் அதிகாரத்தில் பங்குபெற நினைக்கிறோம். கடந்த 2019, 2021-ம் ஆண்டு தேர்தல்களில் நாங்கள் சேர்ந்த கூட்டணி வெற்றி பெறக்கூடிய அளவுக்கு வலுவானதாக அமையவில்லை. மற்றபடி புதிய தமிழகம் கட்சி சமரசம் இல்லாமல் எடுத்த கொள்கையில் வலுவாக போராடியிருக்கிறது. இப்போதும் கூட மாஞ்சோலை தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவதற்கு எதிராக, நானே மதுரை ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்து, ஆஜராகியிருக்கிறேன். தமிழ்நாட்டில் சமுதாய ரீதியாக அதிக வெற்றி பெற்றிருக்கக்கூடிய கட்சி புதிய தமிழகம் கட்சி தான்.

வரும் 2026-ம் ஆண்டு தேர்தல் தொடர்பாக இப்போது சொல்லமுடியாது. ஆனால், ஆளும்கட்சிக்கு எதிராக மிகப்பெரிய கூட்டணி அமைய வாய்ப்புள்ளது. சட்டம் – ஒழுங்கை சீரமைப்பதற்கு அடிப்படையாக இருக்கக்கூடிய பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.. வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பை உருவாக்கித்தர வேண்டும். தென் தமிழகத்தில் இளைஞர்களுக்கு அதிக அளவிலான வேலைவாய்ப்பு கிடைக்கும்வகையில், தொழில் வளங்களை பெருக்க வேண்டும். விலைவாசி உயர்வையும் கட்டுப்படுத்த வேண்டும். சாதி ரீதியாக அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகள், தீண்டாமைகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். கிராமக்கோயில்களில் தீண்டாமை இருந்தால், அதுவும் ஒழிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த இரண்டொரு மாதங்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த போகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.