மீனவர்களின் நீண்டநாள் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

தமிழக மீனவர்களை தொடர்ந்து சிறைபிடித்து அவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்துக் கொண்டிருக்கும் இலங்கை அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்வதாகவும், இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்கவும், இந்த நீண்டநாள் பிரச்சனைக்கு நியாயமான, நிரந்தரத் தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

இந்தியாவின் ஒரு பகுதியாக கச்சத் தீவு இருந்த போது தமிழக மீனவர்கள் கச்சத் தீவின் அருகில் மீன் பிடித்து தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தனர். 1974 ஆம் ஆண்டு, இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டது. அப்போது, அதற்கான உடன்படிக்கையில் இரு நாடுகளும் பரம்பரை பரம்பரையாகத் தங்கள் நாட்டிற்குச் சொந்தமான கடல் எல்லைகளில் எந்தெந்த உரிமைகளை அனுபவித்து வந்தனவோ, அந்தந்த உரிமைகளைத் தொடர்ந்து அனுபவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இதையெல்லாம் இலங்கை அரசு மதிப்பதாகத் தெரியவில்லை. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு வருவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அண்மையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு, அவர்களுடைய இரண்டு படகுகளும் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டேன்.

இந்த நிலையில், இராமேஸ்வரம் அருகே, பாம்பன் வடக்கு கடற்கரையில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நான்கு படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற நிலையில், நேற்று இலங்கைக் கடற்படையினர் அந்தப் படகுகளை விரட்டி, மீன்பிடித் தொழில் மேற்கொண்டிருந்த 35 மீனவர்களையும், அவர்களது 4 படகுகளையும் சிறைபிடித்துள்ளனர். பின்னர் இவர்களை கற்பிட்டி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி, இலங்கை மீன்வளத் துறையிடம் இலங்கை கடற்படை ஒப்படைத்துள்ளது. இலங்கை அரசின் இதுபோன்ற தொடர் கொடூர நடவடிக்கை என்பது தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமையை பறிக்கும் செயலாகும். இது தமிழக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீன்பிடித் தொழில் என்பது தமிழக மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனை. தமிழக மீனவர்கள் தங்கள் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளக்கூடாது என்ற தீய நோக்கத்துடன், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து சிறைபிடித்தும், அவர்களுடைய படகுகளை பறிமுதல் செய்தும் வருகிறது. இதன்மூலம் தமிழக மீனவர்களிடையே ஓர் அச்ச உணர்வினை தோற்றுவிக்க இலங்கை கடற்படை முயல்கிறது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்க முயலும் இலங்கை அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கை அரசுடனான தவறான உடன்படிக்கையின்மூலம் தமிழக மீனவர்களின் வரலாற்று உரிமையை பறிப்பது என்பது நியாயமற்ற செயல். இதற்கு ஒரு நிரந்தர மற்றும் நியாயமான தீர்வினை காணவேண்டிய பொறுப்பும், கடமையும் மத்திய அரசிற்கு உள்ளது. மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் இலங்கை அரசிடம் உடனடியாக பேசி, இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்கவும், இந்த நீண்டநாள் பிரச்சனைக்கு நியாயமான, நிரந்தரத் தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.