கோவை மாவட்டத்திற்கு புதிதாக எந்த திட்டங்களையும் திமுக அரசு அறிவிக்கவில்லை: எஸ்.பி.வேலுமணி!

கோவை மாவட்டத்திற்கு புதிதாக எந்த திட்டங்களையும் திமுக அரசு அறிவிக்கவில்லை. அதிமுக கொண்டு வந்த திட்டங்களை மட்டுமே திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ. எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டினார்.

கோவை மாவட்டம், உக்கடம்- ஆத்துப்பாலம் பகுதியில் ரூ. 481 கோடி மதிப்பில் புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தை முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி காரில் பயணித்தபடி பார்வையிட்டார். ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள மின் மயானத்திற்கு அருகில் மேம்பாலத்தில் ஏறிய அவர் மேம்பாலத்தைப் பார்வையிட்டார். அவரை அதிமுக தொண்டர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களிலும் கார்களிலும் பின்தொடர்ந்தனர். இந்தப் பாலத்தின் பணிகள் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டு பணிகள் நடந்ததைக் குறிப்பிடும் வகையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:-

கோவை மாவட்ட மக்களின் 25 ஆண்டுல கனவுத் திட்டமான உக்கடம் – ஆத்துப்பாலம் மேம்பாலம் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியால் ரூ. 216 கோடி நிதி ஒதுக்கப்பட்டு மேம்பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும், 2021 ஆம் ஆண்டு கூடுதலாக ரூ. 265.44 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. மொத்தம் 481.44 கோடி மதிப்பில் இத்திட்டத்தை அளித்த எடப்பாடி பழனிச்சாமிக்கு கோவை மாவட்ட மக்களின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. இந்த மேம்பாலப் பணிகளை ஒரு வருடத்திற்குள் முடித்திருக்கலாம். ஆனால் மூன்று வருடங்கள் எடுத்துக் கொண்டது. ஆனாலும், சுங்கம் சாலையில் பணிகள் முடிவு பெறாமல் உள்ளன. மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலைத் துறையும் விரைந்து பணிகளை முடிக்க வேண்டும். கோவை மாவட்டத்திற்கு என திமுக எந்த ஒரு புதிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை மட்டுமே திறந்து வைத்து வருகின்றனர்.

அவிநாசி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் அனைத்துக் குளங்களிலும் நீர் நிரப்ப வேண்டும். மூன்றாவது கூட்டுக் குடிநீர்த் திட்டத்திலும் முழுமையாக தண்ணீர் மக்களுக்குச் சென்றடையவில்லை. அவிநாசி சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணி, வெள்ளலூர் பேருந்து நிலையப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். விமான நிலைய விரிவாக்கத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும். உடனடியாக அப்பணிகளை மேற்கொண்டால்தான் பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் செல்லும். இங்கு தொழில் உற்பத்தி, கட்டமைப்புகள் பெருகும். ஸ்மார்ட் சிட்டி திட்டங்களின்கீழ் முன்னெடுக்கப்பட்ட குளங்கள் அனைத்தும் பராமரிப்பின்றிக் கிடக்கிறது. அதனை மாநகராட்சி நிர்வாகம் பராமரிக்க வேண்டும். கோவை அரசு மருத்துவமனை சுத்தமில்லாமல் உள்ளது. அதனை நல்ல முறையில் சுத்தப்படுத்தி பராமரிக்க வேண்டும். நொய்யல் ஆற்று வழித்தடங்களைப் பராமரிக்க வேண்டும். மேலும் இந்த மேம்பாலத்தில் அறிவிப்பு பலகைகள், எச்சரிக்கை பலகைகளை எல்லாம் வைத்து விபத்துகளை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.