கட்டுச் சோற்றில் பூசணிக் காயை மறைக்கும் வித்தையை கற்றவர் சீமான்: அமைச்சர் சேகர்பாபு!

சீமான் புரிந்தும் புரியாமலும் அறிந்தும் அறியாமலும் பேசுவார். கட்டுச் சோற்றில் பூசணிக் காயை மறைக்கும் வித்தையை கற்றவர் சீமான் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் முருக பக்தர்களை உலகளவில் ஒருங்கிணைக்கும் வகையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வரும் 24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் முருகன் மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். விழாவுக்கான ஏற்பாடுகளை அமைச்சர் சேகர்பாபு முன்னின்று கவனித்து வருகிறார். இந்த சூழலில் அண்மையில் பேசிய சீமான், திமுகவினருக்கு திடீரென முருகன் கடவுளாக காட்சியளிக்கிறார். ஆட்சிக்கு வந்து இத்தனை ஆண்டுகள் இல்லாமல் இப்போது முருகனுக்கு மாநாடு நடத்துகிறார்கள் என்றும் விமர்சித்திருந்தார். அத்துடன், தங்களுக்கு பயந்தே திமுக முருகன் மாநாட்டை நடத்துகிறது என்று குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

சீமான் புரிந்தும் புரியாமலும் அறிந்தும் அறியாமலும் பேசுவார். கட்டுச் சோற்றில் பூசணிக் காயை மறைக்கும் வித்தையை கற்றவர் சீமான். திமுக ஆட்சியை பொறுத்த வரை தமிழ்க் கடவுள் முருகனுக்கு புகழ் சேர்க்கும் வகையில், திருச்செந்தூரில் 300 கோடி ரூபாய்க்கு பெருந்திட்ட வரைவை உருவாக்கி மாபெரும் திருப்பணி அங்கு நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு குடமுழக்கு நடைபெறும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் 55 ஏக்கர் நிலத்தை 58 கோடி செலவில் பெருந்திட்ட வரைவுக்காக கையகப்படுத்த உள்ளோம். தற்போது முதல் பெருந்திட்ட வரைவு 99 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தபிறகுதான் பழனி தண்டாயுதபாணி கோயில் குடமுழக்கு நடத்தப்பட்டது. தமிழ் மந்திரங்களும் குட முழுக்கில் ஓதப்பட்டன. திருத்தணியில் 90 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. திருப்பரங்குன்றத்தில் ரோப் கார் வசதியும், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த 66 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அழகர் கோயில் குடமுழுக்கும் திமுக ஆட்சியில் தான் நடைபெற்றது. அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமி மலையில் பெருந்திட்ட வரைவின் வாயிலாக 20 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையெல்லாம் தேர்தலை மனதில் வைத்தா ஏற்படுத்தி வருகிறோம்? திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 1922 கோயில்களுக்கு குட முழக்கு நடத்தப்பட்டுள்ளது.

முருகனுக்கு பெருமை சேர்க்கும் மாநாட்டை தேர்தலை மையப்படுத்தி நடத்தவில்லை. ஏனெனில் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கின்றன. 2026ஆம் ஆண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமையும். ஆகவே, முருகன் மாநாட்டை அரசியலோடு தொடர்புபடுத்தி பேச வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.