மெக்சிகோவில் உணவகம் ஒன்றில் நடத்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி!

மெக்சிகோவில் உணவகம் ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.

மெக்சிகோவின் வடக்கு பகுதி எல்லை நகரான சியுடாட் ஜுவாரெஸ் பகுதியில் ஏராளமான உணவகங்களும் பொழுது போக்கு நகரங்களும் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர்கள் நேற்று மாலை சாப்பிட்டு கொண்டு இருந்தனர். அங்கு பிறந்த நாள் கொண்டாட்டம் களைகட்டி இருந்தது. அப்போது கைத்துப்பாக்கிக்களுடன் உணவகத்திற்குள் நுழைந்த 2 பேர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.

மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உணவகத்தில் இருந்த 4 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 2 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கி சத்தம் கேட்டதும் சாப்பிட்டு கொண்டு இருந்த பலர் தப்பி ஓடி விட்டதால் அவர்கள் உயிர் தப்பினர். இது குறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாடிக்கையாளர்களின் பண பைகளை களவாடும் நோக்கில் துப்பாக்கிச் சூடு நடைபெற்று இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை மெக்சிகோ போலீஸ் தேடி வருகிறது.