எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை புறக்கணிக்கும் யுபிஎஸ்சி: எம்.பி. வில்சன்!

எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை யுபிஎஸ்சி புறக்கணிப்பதாக திமுக எம்.பி. வில்சன் குற்றம் சாட்டியுள்ளார்.

திமுக எம்.பி. வில்சன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

ஆட்சேர்ப்பு செயல்முறையில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்ற அரசியல் சாசன உத்தரவை யு.பி.எஸ்.சி., எப்படி புறக்கணித்துள்ளது என்பதற்கு யு.பி.எஸ்.சி., இன்று வெளியிட்டுள்ள பின்வரும் விளம்பரம் ஒரு சிறந்த உதாரணமாகும்..

பதவிகளுக்கான எந்த இட ஒதுக்கீடும் வழங்காமல், 10 இணை செயலாளர் பதவிகள், 35 இயக்குநர், துணை செயலாளர் பதவிகள் என மொத்தம் 45 பணியிடங்களுக்கான அறிவிப்புகளை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், ஒன்றிய அரசு ஊழியர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சாதாரணமாக இதுபோன்ற விளம்பரங்கள் வெளியிடும்போது, மொத்தமுள்ள 45 இணைச் செயலாளர் மற்றும் இயக்குநர், துணை செயலாளர் பதவிகளில் குறைந்தது 22-23 விண்ணப்பதாரர்கள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. பிரிவுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். இது அரசியல் சாசனத்தை மீறும் செயல் இல்லையா?

மாண்புமிகு பிரதமர் அவர்களே, நீங்கள் இந்த சட்டவிரோதமான, இடஒதுக்கீட்டுக்கு எதிரான ஆட்சேர்ப்பு செயல்முறையை தொடரப் போகிறீர்களா அல்லது அரசியல் சட்ட இடஒதுக்கீட்டு முறையை செயல்படுத்தி புதிய நியமனத்திற்கு அழைப்பு விடுக்கப் போகிறீர்களா?. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.