பாஜகவின் வாழ்நாள் அடிமையாக திமுக மாறிவிட்டது: ஆர்பி உதயகுமார்!

திமுக பாஜகவின் இரட்டை வேடம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது, பாஜகவின் வாழ்நாள் அடிமையாக திமுக மாறிவிட்டது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் விமர்சித்துள்ளார்.

மதுரை அதிமுக சார்பில் உறுப்பினர்கள் அட்டை அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி கல்லுப்பட்டி, பேரையூர் சாலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கலந்து கொண்டு அடையாள அட்டைகளை வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

கருணாநிதிக்கு 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ளார்கள். அது குறித்து எங்களுக்கு வருத்தம் இல்லை. ஆனால் அந்த விழாவிற்கு மத்திய அமைச்சர், இணையமைச்சர், அண்ணாமலை வருகிறார்கள். கருணாநிதிக்கு நாணயத்தை வெளியிட்டால் தமிழகத்தில் பாலாறும், தேனாறுமா ஒட போகிறது? இன்றைக்கு திமுக இரட்டை வேடம் போட்டது வெட்டவெளிச்சமாக ஆகி உள்ளது. இன்றைக்கு 39 நாடாளுமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்ற பிறகு, மத்திய அரசை அழைத்து நாணயத்தை வெளியிடுகிறார்கள். என் அப்பாவிற்கு நாணயத்தை வெளியிட அமைச்சர் உள்ளே வாருங்கள், மத்திய அரசே உள்ளே வாருங்கள் என்று அழைக்கிறார் ஸ்டாலின். ஆனால் இன்றைக்கு நிதி நிலை அறிக்கையில் தமிழகத்திற்கு நெற்றியில் வைக்கும் நாளணா காசு கூட தமிழகத்திற்கு ஒதுக்கவில்லை. இதை கேட்க துப்பு இல்லை. நிதி ஆயோக்கை கூட்டத்தை ஏன் ஸ்டாலின் புறக்கணித்தார்? ஆனால் கவர்னர் அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டுள்ளார். ஏனென்றால் தனது தந்தையர் பெயரில் நாணயத்தை வெளியிட வேண்டும் என்று தான் கலந்து கொண்டுள்ளார்.

அந்த நாணயத்தில் ஹிந்தி மொழி பொறிக்கப்பட்டுள்ளது. ஹிந்து ஒழிக என்று 75 ஆண்டுகள் முழக்கமிட்ட திமுக குரல் இன்றைக்கு சமாதி ஆக்கப்பட்டுள்ளது. இனி ஹிந்தி ஒழிக என்று திமுக கோஷம் போட்டால் மக்கள் நம்ப மாட்டார்கள். பிஜேபியும், திமுகவும் பிரிவினைவாதிகள் என்றும், சங்கி என்றும் மாறி, மாறி கடுமையாக விமர்சித்தார்கள். இதே துரைமுருகன் திமுகவின் மூத்தவர் ஆனால் அவருக்கு சேர்த்து துணை முதலமைச்சர் பதவி கொடுக்கலாம் ஏனென்றால். உங்களுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுக்கப்பட்டு விட்டது இனி உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவியை கொடுத்துவிட்டு நீங்கள் அமெரிக்காவுக்கு பறக்கலாம். தமிழகத்தை பற்றி உங்களுக்கு கவலை இல்லை. இதே துரைமுருகனிடம் துணை முதலமைச்சர் குறித்து கேட்டதற்கு கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லப் போகிறேன் என்று கூறியுள்ளார்.

100 ரூபாய் நாணயத்தை மக்கள் யாரும் பயன்படுத்த மாட்டார்கள் செல்லாத காசு நூறு ரூபாய் நாணயத்தை இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சரும், முதலமைச்சர் விழா நடத்திய நிலைமை தமிழகத்தில் தான் நடைபெற்று உள்ளது. இந்த விழாவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற திமுககூட்டணி கட்சி யாரும் கலந்து கொள்ளவில்லை. அதிமுக பாஜக அடிமை என்று எங்களை அடிமை, அடிமை என்று திமுக கூறியது. ஆனால் இன்றைக்கு பாஜகவின் வாழ்நாள் அடிமையாக திமுக உள்ளது என்று நிருபனமாகியுள்ளது. இன்றைக்கு ஆந்திரா, தெலுங்கானா, பீகார் போன்ற மாநிலங்களுக்கு நிதியை அள்ளி அள்ளி கொடுத்துள்ளனர். இன்றைக்கு எந்த நிதி வழங்காமல் தமிழகத்தில் காவு கொடுத்ததற்கு விழாவை புறக்கணித்து இருக்கலாமே?. இவ்வாறு அவர் கூறினார்.