பாட்டு என்றால் தமிழ் ரசிகர்களுக்கு உயிர்: பாடகர் பி.சுசிலா!

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது வீடு திரும்பியுள்ள பின்னணி பாடகர் பி. சுசிலா ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாடகர் பி. சுசிலா வெளியிட்டுள்ள காணொலியில் கூறியிருப்பதாவது:-

என் மீது தமிழ் ரசிகர்களுக்கு தனி அன்பு. பாடல்கள் என்றால் அவர்களுக்கு உயிர். அதனால்தான் கடவுள் என்னை ‘சரி இருக்கட்டும்’ என்று அனுப்பி வைத்துள்ளார். எனக்காக பிரார்த்தனை செய்து என்னை மீட்டுக் கொண்டு வந்த எல்லாருக்கும் மிக்க நன்றி. கடவுள் எனக்கு எதற்காக இவ்வளவு நல்ல குரல்வளத்தை கொடுத்தார் என்பதை இப்போது புரிந்து கொண்டேன். கடவுள் இன்றி எதுவும் இல்லை. அவரை நம்பினோர் கெடுவதில்லை. இவ்வாறு பி.சுசிலா தெரிவித்துள்ளார்.

கடந்த 17ஆம் தேதி அன்று பாடகர் பி.சுசிலா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை – ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 88 வயதான அவர் சிறுநீரகக் கோளாறு மற்றும் வயது முதிர்வு காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

பி.சுசிலா 1950-கள் முதல் சினிமாவில் பின்னணி பாடகியாக அவரது பயணத்தை தொடங்கினார். சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக 17,000+ பாடல்களை அவர் பாடியுள்ளார். இந்திய மொழிகளில் அதிக பாடல்களை பாடியவராக அறியப்படுகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, ஒரியா, சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளில் அவர் பாடல் பாடியுள்ளார். அவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். பாரம்பரிய இசை குடும்பத்தில் பிறந்த அவர் பால்ய வயதில் இருந்தே அவரது இசை பயணம் தொடங்கியது. திரைத்துறையில் பல்வேறு இசையமைப்பாளர்களுடன் அவர் பணியாற்றி உள்ளார்.