இண்டியா கூட்டணியின் கடும் எதிர்ப்பால் லேட்டரல் என்ட்ரி நியமனங்கள் ரத்து: மு.க.ஸ்டாலின்!

“இண்டியா கூட்டணியின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக லேட்டரல் என்ட்ரி நியமனங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. இது சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி. பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளை பாதுகாக்க நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

இண்டியா கூட்டணியின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக லேட்டரல் என்ட்ரி நியமனங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. இது சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி. ஆனால், மத்திய பாஜக அரசு பல்வேறு வகையில், இடஒதுக்கீடு முறையை பலவீனப்படுத்த முயற்சித்து வருவதால், நாம் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இடஒதுக்கீட்டில் தன்னிச்சையான 50 சதவீதம் என்ற உச்ச வரம்பு உடைக்கப்பட வேண்டும். அதேநேரம், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளை பாதுகாக்க நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.