விஜய்யின் ‘தி கோட்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி கோட்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் அறிவித்திருந்தது. இந்த நிலையில், படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கக்கூடிய நடிகர் விஜய்யின் 68 ஆவது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. இதனை சுருக்கமாக ‘தி கோட்’ என்று அழைக்கிறார்கள். இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மோகன், ஜெயராம், வைபவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தென்னிந்திய சினிமாவின் முன்னணி நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தி கோட் படத்தில் இருந்து இதுவரை 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் தணிக்கை சான்றிதழ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து படத்தின் புதிய போஸ்டரை பகிர்ந்துள்ளார். தணிக்கை வாரியத்தால் ஏ சான்றிதழ் தவிர்க்கப்பட்டுள்ளதால், பட குழுவினரும் விஜய் ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.