குரங்கம்மை தொற்றை மத்திய அரசு சிறப்பாக கையாள்கிறது: மா. சுப்பிரமணியன்!

குரங்கம்மை தொற்றை மத்திய அரசு சிறப்பாக கையாண்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த 1970-களில் பரவிய குரங்கு அம்மை பாதிப்பு, அதன் பின்னா் முடிவுக்கு வந்தது. தற்போது பல்வேறு நாடுகளில் அந்நோய் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை. இருந்தாலும், அண்டை நாடுகளில் அத்தகைய பாதிப்பு இருக்கும்பட்சத்தில் அதற்கான முன்னேற்பாடுகளை மக்கள் நல்வாழ்வுத் துறை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் “குரங்கம்மை” கண்காணிப்புப் பணி ஆய்வை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து, அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களுடன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

விமான நிலையங்களில் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டு, வெப்ப நிலை அதிகமாக இருப்பவர்களை கண்டறியப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பப் படுகிறார்கள். தமிழகத்தில் யாருக்கும் குரங்கம்மை நோய் பாதிப்பு இல்லை. தொற்று அறிகுறி தெரிந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும். பாகிஸ்தானில் ஒருவருக்கு குரங்கம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 10 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு உருவாக்கப்படவுள்ளது. இந்நோய் தொற்று தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு குரங்கம்மை நோய் தொற்றை சிறப்பாக கையாள்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.