சென்னையில் நடக்கும் கார் பந்தயத்தை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம்: உதயநிதி!

வரும் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆகிய நாட்களில் சென்னையில் ஃபார்முலா 4 கார் ரேஸ் நடைபெற உள்ள நிலையில் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். சனிக்கிழமை காலை மட்டும் பொதுமக்கள் இலவசமாக கார் ரேஸை பார்ப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் முதன்முறையாக ஃபார்முலா 4 கார்பந்தயம் நடத்த கடந்த ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த கார் பந்தயம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற இருந்தது. அப்போது மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டதால் கார் பந்தயம் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை தற்போது நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இந்த கார் ரேஸ் சென்னை அண்ணா சாலையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெறவுள்ள ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற இருக்கும் ஃபார்முலா கார் ரேஸ் தொடர்பாக தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அமைச்சர் உதயநிதி கூறியதாவது:-

வருகின்ற 31 ஆம் தேதி மற்றும் 1 ஆம் தேதி சென்னையில் முதல்முறையாக நடக்கக்கூடிய எஃப் 4 கார் பந்தயத்திற்கான ஆய்வுக் கூட்டத்தைத் தலைமைச் செயலாளர் தலைமையில் அனைத்து அரசு உயர் அதிகாரிகளோடு நடத்தினோம். இந்த கார் பந்தயத்திற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 8,000 பேர் உட்கார்ந்து பார்க்கும் அளவிற்கு இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை காலை மட்டும் பொதுமக்கள் இலவசமாக கார் ரேஸை பார்ப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. நைட் ரேஸ் இரவு 10:30 மணி வரைக்கும் நடைபெறுகிறது. எந்தவிதமான போக்குவரத்து இடையூறும் இல்லாமல் அனைத்து வசதிகளும் தரமாக செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.