சூரியின் ‘கொட்டுக்காளி’ படத்தை சீமான்பாராட்டியுள்ளார்!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் கொட்டுக்காளி திரைப்படத்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டியுள்ளார்.

விமல் – லட்சுமி மேனனின் நடிப்பில் உருவான ‘மஞ்சப்பை’ படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்து, பின்னர் ‘கூழாங்கல்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ். ஆணாதிக்கம் போன்ற சமூகத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கி இருக்கும் இந்த படம் திரையிடப்படுவதற்கு முன்பாகவே பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது ரிலீஸுக்கு பின்னரும் லோகேஷ் கனகராஜ், சுதா கொங்கரா போன்ற பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளைப் பெற்று வெற்றி பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது.

நடிகரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் கொட்டுக்காளி திரைப்படத்தை பாராட்டி இருக்கிறார். அவர் கூறியுள்ளதாவது:-

உலக தரமான படைப்பாக கொட்டுக்காளி திரைப்படம் வெளியாகி உள்ளது மகிழ்ச்சியை தருகிறது. தமிழ் திரைத்துறையில் நல்ல கதை களத்திற்கான முக்கியத்துவம் குறைந்து விட்டதாக சொல்லப்பட்ட விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மகாராஜா, கருடன், தங்கலான், வாழை, கொட்டுக்காளி போன்ற அடுத்தடுத்து வெளியாகியிருக்கும் தமிழ் திரைப்படங்கள் அழுத்தமான கருப்பொருளோடு வெளியாகி இருப்பது மிகுந்த மன நிறைவை தருகிறது. குறைந்த பட்ஜெட்டில் மிக சிறிய கதை களத்தில் திரைக்கதைக்கு உயிரோட்ட மொழிக்கும் இசை என்று ஏதுமில்லாமல் சிறிதும் சோர்வோ சலிப்போ உண்டாகாமல் ஒரு திரைப்படத்தை சுவைபட படைத்தளிக்க முடியும் என்பதை மிகப் பெரிய சாதனை. பன்னாட்டு திரைப்படங்களுக்கு இணையான உயரத்தில் தமிழ் திரைக்கடையை சிறகடிக்க செய்த அன்புத்தம்பி வினோத் ராஜா அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.

கூழாங்கல் படத்தை போல் கொட்டுக்காளி படமும் விருதுகள் பல வெல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தம்பி சூரி தம்முடைய அபாரமான நடிப்பாற்றலால் நடிப்பின் உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞனாக சூரி திகழ்வார் என்பதற்கு கொட்டுக்காளி திரைப்படமும் மற்றுமொரு சான்று. கதையின் நாயகியாக வரும் அன்னா பென் வெறித்துப் பார்க்கும் கண் பார்வையிலேயே தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி திரைப்படத்திற்கு வலிமை சேர்த்துள்ளார். கதையின் மீது மட்டும் நம்பிக்கை வைத்து இப்படி ஒரு கலை படைப்பினை தயாரித்து வழங்கிய சிவகார்த்திகேயனுக்கும் என்னுடைய பாராட்டுகள். மேலும் கொட்டுக்காளி பட குழுவினருக்கு என்னுடைய அன்பும் வாழ்த்துகளும். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.