குரங்கு அம்மையை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது: மா. சுப்பிரமணியன்!

குரங்கு அம்மை பாதிப்பு தமிழகத்தில் இல்லை என்றும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள குரங்கு அம்மை பிரிவை ஆய்வு செய்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், அது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கத்தை தொடக்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

குரங்கு அம்மை என்பது பெரியம்மையின் தொடர்ச்சிதான். பெரியம்மை சிகிச்சைக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைதான் குரங்கு அம்மைக்கும் அளிக்கப்படும். பருவமழையின்போது இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும். சென்னை மாநகராட்சியும் தமிழ்நாடு அரசும் கொசு ஒழிப்புப் பணி உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

டெங்கு பாதிப்பு என்பது தற்போது கட்டுக்குள்தான் இருக்கிறது. எனினும் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால் டெங்கு பாதிப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். செப். 2 ஆம் தேதி உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறை இணைந்து ஒரு கூட்டம் நடத்தப்பட உள்ளது.

குரங்கு அம்மை சிகிச்சைக்காக பிரத்யேக வார்டுகள் சென்னை, கோவை, திருச்சி, மதுரை அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ளன. தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டால் அனைத்து முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. அனைத்து விமான நிலையங்களிலும் துறைமுகப் பகுதிகளும் சோதனைக்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கென சிறப்பு மருத்துவக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும் குரங்கு அம்மை சிகிச்சை தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கம் இன்று ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நடைபெறுகிறது. இதில் 200 மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு இதுவரை எதுவும் இல்லை. குரங்கு அம்மை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தனியார் மருத்துவமனைகளையும் கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.