எல்லோரும் போய் படு என்று சொன்னால் அப்படியே படுத்து விட மாட்டார்கள்: கஸ்தூரி!

எல்லோரும் போய் படு என்று சொன்னால் அப்படியே படுத்து விட மாட்டார்கள். எனக்குத் தெரிந்து பல நடிகைகள் எந்த ஒரு அட்ஜஸ்ட்மெண்டும் செய்யாமல், பெரியாளாக வந்திருக்கிறார்கள் என்று கஸ்தூரி கூறினார்.

மலையாள சினிமாவில் பூகம்பத்தை கிளப்பி இருக்கும் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து நடிகை கஸ்தூரி தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-

மீ டூ மூவ்மெண்டிலேயே இது போன்ற விஷயங்கள் வெளியே வந்து விட்டன. இதனை, ஹேமா கமிட்டி கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் விசாரணை செய்து, ஆமாம், அது உண்மைதான் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்து இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் லஞ்சம் வாங்குவதற்கும், கொள்ளை அடிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காக அவர்கள் தங்களை கூப்பிடும் ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்வது லஞ்சம் கொடுப்பதற்கு ஒப்பானது. ஆனால், வலுக்கட்டாயமாக இணங்கச்செய்வது கொள்ளை அடிப்பதற்கு சமமாகும்.

இன்னொரு விஷயம் இதுபோன்ற விஷயங்களை வெளியே சொல்பவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. சின்மயிக்கு நடந்ததை நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். அவர்களுக்கு சுத்தமாக பிழைப்பே இல்லாமல் போய்விட்டது. சினிமா என்பது அதிக உழைப்பை கோரக்கூடிய வேலை. சினிமாவில் வெயிலில் தான் வேலை செய்ய வேண்டும். இருட்டில் வேலை செய்ய முடியாது. இருட்டில் வேலை செய்யக்கூடிய படமாக இருந்தால் அது வேறு படமாக மாறிவிடும். ஆகையால் எல்லா இடங்களிலும் வசதிகுறைபாடு உள்ளிட்ட சின்ன சின்ன குறைகள் இருக்கும்

எல்லோரும் போய் படு என்று சொன்னால் அப்படியே படுத்து விட மாட்டார்கள். எனக்குத் தெரிந்து பல நடிகைகள் எந்த ஒரு அட்ஜஸ்ட்மெண்டும் செய்யாமல், பெரியாளாக வந்திருக்கிறார்கள். இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் தனக்கு கொடுக்கப்படும் உறுதியை நம்பி, தன்னுடைய உடலை படுக்கைக்காக கொடுக்கிறார்கள். அதில் ஏமாந்தும் போகிறார்கள். ஏமாந்து போன பின்னரும் கூட, இன்னொரு இடத்தில் அதுபோன்ற வாய்ப்புகள் நமக்கு கிடைக்குமா என்பதற்காக மீண்டும் மீண்டும் படுக்கையை பகிர்கிறார்கள்.
இதில் சில பேருக்கு அது ஒர்க் அவுட் ஆகலாம் சில பேருக்கு ஒர்க் அவுட் ஆகாமலும் போகலாம்.

ஒரு பிரபல டைரக்டர் இருக்கிறார். கதாநாயகிக்கு டேக் ஓகே செய்யவே மாட்டார். ஒரு நாள் முழுக்க அவரை வைத்து செய்வார். மூன்றாவது நாள் வரும் போது அவர் முதல் டேக்கிலேயே அந்த ஹீரோயினை ஒகே செய்வார். எதனால் என்பது, அங்கு இருக்கும் எல்லோருக்குமே தெரியும். அது அந்த ஆள் அவருடன் படுக்கைக்கு இணங்கி செல்லும் பொழுது அது நடக்கும். ஆனால், எல்லோரும் அப்படி கிடையாது. எனக்கும் அது நடந்து இருக்கிறது என்றால் நிச்சயமாக நடந்திருக்கிறது. அதற்காக என்னை படத்தில் இருந்து தூக்கி இருக்கிறார்கள். டைரக்டருடன் நான் படுக்கையை பகிரவில்லை என்று என்னை கிட்டத்தட்ட மூன்று படங்களில் இருந்து தூக்கி விட்டார்கள். ஹீரோவுடன் ஒத்துப் போக முடியாது என்று நானே ஒரு படத்திலிருந்து விலகி விட்டேன். அந்தப் படத்தை முடித்துவிட்டு அவருடன் வேறு எந்த படங்களிலும் நான் நடிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.