விஜய்யின் ‘தி கோட்’ 4-வது சிங்கிள் நாளை வெளியாகிறது!

விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ படத்தின் 4-வது சிங்கிள் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் 68-வது படமாக ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (தி கோட்) உருவாகி இருக்கிறது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம்ஜி, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். செப். 5-ம் தேதி வெளியாகும் இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இதுவரை இப்படத்திலிருந்து 3 பாடல்களை படக்குழு வெளியிட்டுள்ளது. முதல் சிங்கிளான ‘விசில் போடு’ வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இரண்டாவது சிங்கிளான ‘சின்ன சின்ன கண்கள்’ விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது. மறைந்த பாடகர் பவதாரிணியின் குரல் ஏஐ மூலம் மறுஆக்கம் செய்யப்பட்டு இந்தப் பாடல் வெளியிடப்பட்டது.

இதனையடுத்து யுவன் குரலில் ‘ஸ்பார்க்’ என்ற பாடலும் அண்மையில் வெளியானது. இந்த நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள 4வது சிங்கிளை படக்குழு வரும் ஆகஸ்ட் 31 அன்று வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளது.