திமுக அரசில் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது: எடப்பாடி

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (NIT- Trichy) பெண்கள் விடுதி அறையில், அங்கிருந்த மாணவி முன்பே இணையதள பழுது பார்க்க வந்த நபர் பாலியல் ரீதியாக அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

திருச்சி மாவட்டம் துவாக்குடியில் தேசிய தொழில்நுட்பக் கழகமான என்ஐடி விடுதி செயல்பட்டு வருகிறது. அங்கு ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் விடுதியில் திடீரென மின்விநியோகம் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மின் இணைப்பில் ஏற்பட்ட பழுது காரணமாக மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டதாகவும், இதற்காக ஒப்பந்த ஊழியரை அழைத்து மின் இணைப்பை சரி செய்ய விடுதி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதுவரை மாணவிகள் தங்கள் அறைகளில் இருக்க வேண்டுமென விடுதி வார்டன் பேபி கூறியிருக்கிறார். இதனையடுத்து மாணவிகள் தங்கள் அறைகளில் செல்போன் டார்ச் மற்றும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்திருக்கின்றனர். இந்த நிலையில் இணைப்பை சரி செய்ய வந்த ஒப்பந்த ஊழியர் ஒருவர் மாணவி தனியாக படித்துக் கொண்டிருந்தபோது பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதையடுத்து அந்த மாணவி அலறிய நிலையில் அருகில் இருந்த மாணவிகள் திரண்டு வந்து அந்த இளைஞரை பிடித்தனர். மேலும் இது தொடர்பாக திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கும் புகார் அளிக்கப்பட்டது.

இதற்கிடையே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக அவர்கள் வார்டனிடம் புகார் தெரிவித்து இருக்கின்றனர். அப்போது மாணவியின் உடை குறித்து அவதூறாக பேசிய கல்லூரி விடுதியின் வார்டனான பேபி, அந்த மாணவியை திட்டியும் இருக்கிறார். இதனையடுத்து மாணவியை அவதூறாக பேசிய வார்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி மாணவிகள் கல்லூரி வளாகத்தில் என்ஐடி இயக்குனரான அகிலாவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (NIT- Trichy) பெண்கள் விடுதி அறையில், அங்கிருந்த மாணவி முன்பே, மின் இணைப்பை பழுது பார்க்க வந்த நபர் பாலியல் ரீதியாக அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இதுகுறித்து புகாரளிக்க சென்ற மாணவியை காவல் நிலையத்தில் இழிவாக பேசியதாகவும் தகவல் வருகின்றன. பாதிக்கப்பட்ட பெண்களிடம் காவல்துறை இதுபோன்று நடந்துகொள்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு, சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெண்கள் கழிப்பறை பகுதியில் மாணவி ஒருவருக்கு வடமாநிலத் தொழிலாளரால் பாலியல் அச்சுறுத்தல் ஏற்பட்டதாக செய்திகள் வந்தன. விடியா திமுக அரசில் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை நான் சுட்டிக்காட்டி வந்தும், இந்த விடியா அரசு இதனை இரும்புக்கரம் கொண்டு அடக்க திராணியின்றி செயலற்று இருப்பதன் விளைவே இதுபோன்ற சம்பவங்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தண்டிக்கும் நிர்பயா சட்டத்தை, தமிழ்நாட்டில் ஒரு நிர்பயா சம்பவம் நடந்தால் தான் கையில் எடுப்பதாக இந்த விடியா திமுக அரசு எண்ணத்தில் இருக்கிறதா?

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்காத, இதுகுறித்து புகார் அளிக்கும் பெண்களை கொச்சைப்படுத்த முயலும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். திருச்சி NIT-யில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாவண்ணம் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.