அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் நிபந்தனை தளர்வு!

அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான அமலாக்கத் துறை அதிகாரியின் ஜாமீன் நிபந்தனையை தளர்த்தி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் அங்கித் திவாரிக்கு, தினமும் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பின்னர் ஜாமீன் நிபந்தனை தளர்த்தப்பட்டு, வாரம் ஒருமுறை நீதிமன்றத்தில் கையெழுத்திட உத்தரவிடப்பட்டது.

இந்த நிபந்தனையை நீக்கக் கோரி அங்கித் திவாரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். மனுவில், ‘திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜராக வாரத்தில் 150 கிலோ மீட்டர் பயணம் செய்வதில் சிரமமாக உள்ளது. இதனால் உடல் மற்றும் மனரீதியாக பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, ஜாமீன் நிபந்தனையை முழுமையாக நீக்க வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில், ”வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே அவருக்கு பல தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, நீதிமன்றத்தில் கையெழுத்திடும் நிபந்தனையிலிருந்து விலக்கு அளிக்கக் கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, ”திண்டுக்கல் நீதிமன்றத்தில் 2 வாரத்துக்கு ஒரு முறை திங்கள் கிழமையில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்” என நிபந்தனையை தளர்த்தி இன்று உத்தரவிட்டார்.