தமிழகத்தில் தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடுகிறது: எல்.முருகன்!

தமிழகத்தில் தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடுகிறது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சனம் செய்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி நகராட்சி 6வது வார்டு அம்பேத்கர் நகரில் அமைந்துள்ள அரசு தொடக்கப் பள்ளி சுவற்றிலும், சமையலறை பூட்டிலும் மனிதக் கழிவு பூசப்பட்ட சம்பவம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனைக் குறிப்பிட்டு மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட அறிக்கையில், பள்ளியின் சுற்றுச் சுவர் உயரம் குறைவாகவும், பல இடங்களில் இடிந்தும் உள்ளதால், விடுமுறை நாட்களில் சமூக விரோதிகள் உள்ளே புகுந்து தகாத செயல்களில் தொடர்ந்து ஈடுபடுட்டு வருவதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் என்று குறிப்பிட்டார்.

இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள் என்றும், இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்களை யாராக இருந்தாலும் தமிழக அரசு அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் எனவும் வலியுறுத்தியதோடு, பள்ளிகளிலும் பொது இடங்களிலும் இதுபோன்ற அருவெறுக்கத்தக்க வகையில் கொடூரங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன என்றும் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து, “தமிழகத்தில் தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடுகிறது. மனித நாகரீகம் அருவெறுக்கச் செய்யும் செயலை தடுத்து நிறுத்த திராணியற்ற போலி திராவிட மாடல் ஆட்சி தவறிவிட்டது. குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச் சாணம் கலக்கும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. பள்ளிகளில் மலம் பூசும் அவலங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன” என்றும் விமர்சனம் செய்தார்.

மேலும், “தமிழகத்தின் பல பகுதிகளில் தீண்டாமை கொடுமை, இரட்டைக் குவளை முறை, இரட்டை சுடுகாடு, கோயில்களுக்குள் பட்டியலின மக்கள் செல்ல முடியாத சூழல் நிலவி வருகிறது. அரசு பள்ளிகளில் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் சுற்றுச் சுவர், இரவுக் காவலாளி இல்லாததால் மது அருந்துவோரின் கூடாரமாக பள்ளிகள் மாறி வருகின்றன. உலகத்தின் பல பகுதிகளில் இல்லாத சமூக அநீதி தொடர்ந்து நிகழ்வது திமுகவினர் திராவிட பெருமை பேசும் தமிழகத்தில் தான். திராவிட மாடல் சாதனை ஆட்சி நடத்துவதாக தற்பெருமை பேசும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் நடக்கும் இதுபோன்ற அவலங்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்?” என்றும் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.