காவல்துறையை சுதந்திரமாக செயல்படச் செய்து போதை பொருளை ஒழிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

திமுக அரசு காவல்துறையை சுதந்திரமாக செயல்படச் செய்து போதை பொருளை ஒழிக்க வழி செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை செல்லும் வழியில் பொத்தேரி ரயில் நிலையம் அருகே உள்ள பிரபல பல்கலைக் கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வெளிமாநில மற்றும் வெளிநாட்டு மாணவ, மாணவிகள் பொத்தேரி, காட்டாங்கொளத்தூர் பகுதிகளில் குடியிருப்புகளில் தங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் தங்கி இருக்கும் நிலையில் அங்கு கஞ்சா புழக்கம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதை அடுத்து அங்கு காலை ஆறு மணிக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் நுழைந்து கல்லூரி மாணவர்களின் அறைகளில் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அவர்கள் கஞ்சா பயன்படுத்துவது தெரிய வந்தது. இதை அடுத்து அரை கிலோ கஞ்சா, கஞ்சா சாக்லேட், கஞ்சா எண்ணெய், கஞ்சா புதைக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சோதனையின் அடிப்படையில் கஞ்சா விற்ற இரண்டு பேர் கஞ்சா பயன்படுத்திய ஒரு மாணவி உள்ளிட்ட 19 மாணவர்கள் என மொத்தம் 21 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக விசாரணைக்குச் சென்ற கல்லூரி மாணவர் ஒருவர் தான் வசித்து அடுக்குமாடி கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து குதித்து செவ்வாய்க்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், திமுக அரசு காவல்துறை சுதந்திரமாக செயல்படச் செய்து போதை பொருளை தமிழகத்தில் அறவே இல்லாமல் ஒழித்திட்டு, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்காலத்தை பாதுகாத்திட வேண்டுமென அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள் எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-

விடியா திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் குறித்தும், இதனால் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் சீரழிவது குறித்தும் “தமிழ்நாட்டில் போதைபொருள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது; விடியா திமுக அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்து, போதை பொருள் புழக்கம் தடுக்கவேண்டும்” என 2 ஆண்டுகளாக தொடர்ச்சியாக சுட்டிக்காட்டியும் எச்சரித்தும் வந்துள்ளேன். அப்போதே உரிய நடவடிக்கை எடுத்து போதைப்பொருள் புழக்கத்தை தடுத்திருந்தால், இன்றைய தினம் மாணவர்கள் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி அவர்களது வாழ்க்கை சீரழியும் நிலை ஏற்பட்டு இருக்காது.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் தனியார் கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் வீடுகளிலும் காவல்துறையினர் சோதனை மேற்கொண்ட செய்திகள் வந்துள்ளன. இச்சோதனையின் ஊடாக, மாணவர் ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து, பெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வர சொல்லியதால் மன அழுத்தத்தில் தவறான முடிவெடுக்க முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி மிகவும் வருத்தத்திற்குரியது.

இனியாவது இந்த விடியா திமுக அரசு காவல்துறை சுதந்திரமாக செயல்படச் செய்து போதை பொருளை தமிழகத்தில் அறவே இல்லாமல் ஒழித்திட்டு, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்காலத்தை பாதுகாத்திட விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.