நடிகர் கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர் வெளியானது!

கார்த்தி, அரவிந்த்சாமி நடிக்கும் ‘மெய்யழகன்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசர் காட்சிகள் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகின்றன.

‘96’ பட புகழ் ப்ரேம்குமார் இயக்கும் புதிய படம் ‘மெய்யழகன். கார்த்தியின் 27-வது படமான இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ரீதிவ்யா நாயகியாக நடித்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். படம் இம்மாதம் 27-ம் தேதி திரைக்கு வருகிறது.

இந்நிலையில் ‘மெய்யழகன்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. படம் தஞ்சாவூரை கதைக்களமாக கொண்டு நகர்கிறது என்பதை டீசரின் தொடக்கத்திலேயே உணர்த்தி விடுகிறார்கள். நீடாமங்கலத்தில் திருமணம் ஒன்றுக்காக மண்டபத்துக்குள் நுழைகிறார் அரவிந்த்சாமி. அவரது கண்ணை போத்திக் கொண்டு வந்து இன்ட்ரோ கொடுக்கிறார் கார்த்தி. இவர்கள் இருவருக்கிடையிலான உறவையும், பயணத்தையும் இப்படம் பேசும் என தெரிகிறது. கார்த்தி கிராமத்தில் வளர்ந்து வெகுளி பையானாகவும், அரவிந்த் சாமி நகரத்தைச் சேர்ந்தவராகவும் காட்சிப்படுத்தியுள்ளனர். இவர்களுக்கிடையிலான முட்டல், மோதல், உரசல்கள் தான் படம் என கணிக்க முடிகிறது.