இணைய ஊடகங்களை முறைப்படுத்த விரைவில் புதிய மசோதா: எல்.முருகன்!

இணைய ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். அவற்றை முறைப்படுத்த விரைவில் புதிய ஒளிபரப்பு மசோதா கொண்டு வர இருக்கிறோம். என, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் தனியார் அறக்கட்டளை சார்பில், மத்திய அரசின் மக்கள் மருந்தகம் திறப்பு விழா நேற்று நடந்தது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மக்கள் மருந்தகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

மலிவு விலை மருந்துகள் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்பதற்காக இந்த மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. சந்தை விலையை விட குறைந்த விலைக்கு மருந்துகள் வழங்கப்படுகின்றன. இந்தியா முழுவதும் மிகவும் பயனுள்ள திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. இந்துகளின் ஒற்றுமைக்காக பாலகங்காதார திலகர் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை தொடங்கினார். தமிழகம் முழுவதும் 50 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.

மத்திய கல்வித்துறை அமைச்சர், தமிழக முதல்வருக்கு பி.எம்.ஸ்ரீ பள்ளி திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கடிதம் எழுதினால் அரசிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. புதிய தேசிய கல்வி கொள்கை அனைத்து மக்களிடம் கருத்து கேட்கப்பட்ட பின் கொண்டு வரப்பட்டது. தாய்மொழி கல்வியை வலியுறுத்துகிறது தேசிய கல்வி கொள்கை. இன்று கூட மத்திய கல்வி அமைச்சர் ட்விட் செய்துள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தடுக்க முடியாது. ஆக்கப்பூர்வமாக நாட்டின் வளர்ச்சிக்கு அவற்றை பயன்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அலுவலகம் கோவைக்கு கொண்டு வரவும் வாய்ப்பு உள்ளது. மொபைல்போன் வைத்திருப்பவர்கள் எல்லாரும் செய்தியாளர் என்கின்றனர். இதை முறைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். இதற்காக புதிய ஒலிபரப்பு மசோதா விரைவில் கொண்டு வரப்படும். மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. ‘யூடியூப்’ உள்ளிட்ட இணைய ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். தேசத்துக்கு எதிரான கருத்துகளை பகிர்ந்த 69 ‘யூடியூப்’ சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன. விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளதற்கு வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார்.