விடுதலை சிறுத்தைகள் அழைத்து அதிமுக சென்றால் நல்லது தானே: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

விடுதலை சிறுத்தைகள் அழைத்து அதிமுக சென்றால் நல்லது தானே, நல்ல விஷயத்திற்காக ஒன்று சேர்ந்திருக்கிறார்கள் என்று அர்த்தம் தானே என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ள முப்பெரும் விழா மாநாட்டுப் பணிகளை அமைச்சர் மா சுப்பிரமணியன் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

பின்னர் அமைச்சர் மா சுப்பிரமணியன் ராட்சத பலூனை பறக்கவிட்டு மாநாட்டு பணிகளை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மாநாடு ஏற்பாடு பணி குறித்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “செப்டம்பர் 17ஆம் தேதி செவ்வாய் கிழமை மாலை 5 மணிக்கு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் முப்பெரும் விழா மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கி 75 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் பவள விழாவும் நடைபெறுகிறது. ஒரு லட்சம் பேர் கலந்து கொள்ளக் கூடிய வகையில் மாநாடு அமைக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “இது முழுக்க முழுக்க திமுகவின் முப்பெரும் விழா. அனைத்து கட்சி நிகழ்ச்சி அல்ல” என்று பதில் அளித்தார்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவை அழைத்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “ விடுதலை சிறுத்தைகள் அழைத்து அ.தி.மு.க சென்றால் நல்லது தானே. நல்ல விஷயத்திற்காக ஒன்று சேர்ந்திருக்கிறார்கள் என்று அர்த்தம் தானே. மதுவிலக்கு விஷயங்களில் அரசே விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது.

2017 முரசொலி பவள விழாவில் இதே மைதானத்தில் தான் கூட்டணி உருவாகியது. 2017 இல் இருந்து 2024 வரை கூட்டணியில் எந்தவித பிசிறும் ஏற்படாமல் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒருங்கிணைத்து வருகிறார்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.