சீனிவாசனுக்கு ஒரு நியாயம், நிதின் கட்கரிக்கு ஒரு நியாயமா: செல்வப்பெருந்தகை!

நிதின் கட்கரி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதிய கடிதத்தில் அவ்வளவு கேலி, கிண்டல், கண்டனக் குரல் இருந்தது. அவரை மன்னிப்பு கேட்க வைக்க முடியுமா. சீனிவாசனுக்கு ஒரு நியாயம், நிதின் கட்கரிக்கு ஒரு நியாயமா என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி குறைதீர்க்கும் நிகழ்ச்சியில் ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் தனது கோரிக்கையை வைத்தார். அதற்காக அவரை தனது அறைக்கு வரவழைத்து மன்னிப்பு கேட்க வைத்ததும், அவரை நடத்திய விதமும் எல்லோரையும் கலங்கடிக்கச் செய்துள்ளது. அதிகாரத்தில் இருப்பவர்கள் எதிர்க்கட்சியினரிடம், பொதுமக்களிடம், வணிகர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற குறைந்தபட்ச நாகரீகம் கூட தெரியாமல் இவ்வாறு செய்திருப்பது வருத்தம் அளிக்கிறது. இச்செயலை காங்கிரஸ் சாப்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

அவர் என்ன பாதகம் செய்தார், என்ன கேள்வி கேட்டார்?. குறைகள் இருந்தால் ஜிஎஸ்டி அதிகாரிகளிடம் கூறுங்கள் என்று கூறியிருந்தார்கள். குறைகளைத்தான் அன்னபூர்ணா சீனிவாசன் கூறியிருக்கிறார். இதில் என்ன பாதகம் இருக்கிறது. சிறிய குழந்தைகள் கூட வாங்க, போங்க என அழைக்கும் பண்புள்ள மண் இது. அனைவருக்கும் மரியாதையை சொல்லிக் கொடுக்கும் மண் கோவை. இந்த மண்ணில் இப்படியொரு அநாகரீகமான செயல் நடந்திருப்பதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் என்பதற்காக அல்ல. அதிகாரத்தில் உள்ளவர்கள் அதிகார தோரணையில் மிரட்டுவதும், மன்னிப்பு கேட்க வைப்பதும், பொது வெளியில் வெளியிடுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நிதின் கட்கரி நிதியமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் எவ்வளவு கேலி, கிண்டல், கண்டனக் குரல்கள் இருக்கிறது. நிதின்கட்கரியிடம் கோவை சட்டமன்ற உறுப்பினரும், நிதியமைச்சரும் ஒரு ஹோட்டல் அறையில் அமர்ந்து கொண்டு, அவரை வரச் சொல்லுங்கள், கூனி குறுகி சாய்ந்து உட்காராமல் நுனி நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு நிதின் கட்கரி மன்னிப்பு கேட்பாரா? அவர்களை கேட்க வைக்க முடியுமா? அதை வீடியோ பதிவு செய்து வெளியிடுவார்களா? நிதின் கட்கரிக்கு ஒரு நியாயம், சீனிவாசனுக்கு ஒரு நியாயமா. நிதின் கட்கரி விமர்சனம் செய்ததைவிட அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் விமர்சனம் செய்து விட்டாரா?. ஜிஎஸ்டியில் உள்ள குறைகளைத்தான் கூறியிருக்கிறார். நிதின் கட்கரி கேள்விகள் கேட்டதற்கும், அன்னபூர்ணா சீனிவாசன் கேட்டதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. சீனிவாசன் பண்பாக மிகவும் நாகரீகத்தோடு கேட்டுள்ளார்.

உள்ளூர்காரர்களையே கிண்டல், ஏளனம், மன்னிப்பு கேட்க வைப்பது திரைப்படங்களில் தான் பார்த்திருப்போம். திரைப்படத்தில் வில்லன்கள் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு பிறகு ஆவணமாக வெளியிடுவதைப்போலத் தான் இந்தச் சம்பவம் உள்ளது. அங்கிருந்த நிர்மலா சீத்தாராமன், வானதி சீனிவாசனும் மன்னிப்பே கேட்கவில்லை. இந்த விவகாரத்தில் அண்ணாமலை மன்னிப்பு கேட்கக் கூடாது. இதுபோன்று அவமானப்படுத்துவதையும், அசிங்கப்படுத்துவதையும் நமது வீட்டு பெண்கள் செய்வார்களா? இது அநாகரிகத்தின் உச்சம். திருமாவளவன் அவரது கட்சி விவகாரம், அவருடைய கருத்து. எங்களைப் பொறுத்தவரை இந்திய கூட்டணி வலிமையாக இருக்கிறது இன்னும் வலிமை பெற்றுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.